சிரேஷ்ட ஊடகவியலாளர் நடராஜசிவம் காலமானார்

- இறுதிக்கிரியை இன்று பொரளையில்

சிரேஷ்ட ஊடகவியலாளரும் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகரும் ரூபவாஹினி மற்றும் வானொலிச் சேவையின் அறிவிப்பாளருமான சின்னையா நடராஜசிவம் காலமானார்.

அவர் தனது 74ஆவது வயதில், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் நேற்றிரவு (24) காலமானார்.

தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தமிழ் பிரிவில் பணியாற்றிய அவர், தமிழ் செய்தி வாசிப்பாளராக பல ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார்.

அத்தோடு, தனியார் வானொலியான சூரியன் எப்.எம். 1998ஆம் ஆண்டு ஆரம்பித்த காலத்தில் முதலாவது முகாமையாளராக அவர் கடமையாற்றியதுடன், 2013ஆம் ஆண்டுவரை ஆலோசகராகவும் பணியாற்றினார்.

தொலைக்காட்சி தொடர் மற்றும் திரைப்படத்துறையில் அவர் பங்காற்றியிருந்ததுடன், விசேடமாக, யுத்த காலத்தில் ஒளிபரப்பாகிய தொலைக்காட்சி தொடர் மற்றும் திரைப்படத்துறையில் நல்லிணக்கத்தை சித்தரிக்கும் பல கதாபாத்திரங்களில் அவர் நடித்துள்ளார்.

‘சுது அக்கா’ (1997), ‘யுத கினி மெத’ (1998), ‘இர ஹந்த யட்ட’ (2010), ‘செல்வம்’ (2011) ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

அவரின் பூதவுடல் பொரளையிலுள்ள தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, இன்று (25) மதியம் 12 மணியளவில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று, பொரளை பொது இந்து மையானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக, குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...