முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவரின் கொலை தொடர்பில் கண்டனம்

முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவரின் கொலை தொடர்பில் கண்டனம்-FHA Condemn-Three Wheeler Associations Assasination

இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் மறைந்த தலைவர் சுனில் ஜயவர்தன, கடந்த புதன்கிழமை மாலை, கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக, The Finance Houses Association of Sri Lanka (FHA) நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்நிறுவனத்த்தின் தலைவர், ஆர்.எச். அபேகுணவர்தன விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மறைந்த சுனில் ஜயவர்தனவின் கொலையானது  மோசடியான நிறுவனங்களால்  கடைபிடிக்கப்படும் நெறிமுறையற்ற மற்றும் கட்டுக்கடங்காத நடைமுறைகளுக்கு ஒரு உதாரணமென்பதுடன், குறிப்பிட்ட நிதி நிறுவனம் இலங்கையின் மத்திய வங்கியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட 41 ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களுடன் எந்த வகையிலும் தொடர்புபடுத்தப்படவில்லையென்பதுடன்,  FHA Sri Lanka உடனும் இணைந்ததொன்றல்ல.

அந்த வகையில், குறிப்பிட்ட மோசடியான நிறுவனத்தின் நடவடிக்கைகளையும், அவர்களின் அவசியமற்ற செயல்களால் ஏற்பட்ட அசம்பாவிதத்தையும் FHA  கண்டிக்கிறது.

இலங்கை முழுவதும் 41 உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களை உள்ளடக்கிய FHA, தொழில்துறையில் நீண்டகால வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், இது வைப்புகளை பெறும் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் செயல்படும் ஒரு ஒழுங்குபடுத்தப்படாத சூழலில் தோன்றி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. நிதி நிறுவனங்கள் என்று ‘உரிமை கோரிய’ சில நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல மோசடி மற்றும் நெறிமுறையற்ற நடைமுறைகள் இதற்கு வழிவகுத்தது.

FHA உடன் இணைந்த 41 உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளபடி கடனை பிற்போட்டுள்ளதாக FHA மேலும் தெளிவுபடுத்தியது. இது கொவிட்- 19  தொற்றுநோய் மற்றும் உலகளாவிய நெருக்கடியுடன் ஏற்பட்ட நிதி சிக்கல்கள் காரணமாக நிவாரண நடவடிக்கைகளை வழங்கவும் பொது மக்களுக்கு அவர்களின் நிதிக் கடன்களுக்கு உதவவும் அறிவுறுத்தும், இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட 2020 ஆம் ஆண்டின் சுற்றறிக்கை எண் 04 க்கு அமைவானதாகும்.

கடன் பிற்போடல் விதிமுறைகளுக்கு இணங்க, உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள் இலங்கை முழுவதும் சுமார் 500,000 வாடிக்கையாளர்களுக்கு கடன் நிவாரணம் வழங்கியுள்ளன. இத்தகைய சூழலில், ஒழுங்குபடுத்தப்படாத மற்றும் உரிமம் பெறாத கடன் வழங்கும் நிறுவனத்தால் ஏற்பட்ட குழப்பமான நடவடிக்கைகளையும், இதன் விளைவாக ஏற்பட்ட விலைமதிப்பற்ற மனித உயிர் இழப்பு தொடர்பிலும் FHA தனது கண்டனத்தை மீண்டும் வலியுறுத்துகின்றது.

இந்த நிலமை மற்றும் கிடைக்கும் தகவல்களை கருத்தில் கொண்டு எங்கள் அடுத்த அறிக்கை வெளியிடப்படும்.


Add new comment

Or log in with...