குணமடைந்த கடற்படையினர் 657ஆக உயர்வு

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 657ஆக உயர்வடைந்துள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு, கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 35 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (11) வெளியேறியுள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இக்கடற்படையினரில் 13 பேர் முல்லேரியா வைத்தியசாலையிலும், 11 பேர் மினுவாங்கொடை வைத்தியசாலையிலும், 07 பேர் IDH வைத்தியசாலையிலும், 03 பேர் கடற்படை வைத்தியசாலையிலும், மற்றுமொருவர் வெலிகந்த வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

குறித்த வைத்தியசாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில், அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில், குறித்த வைரஸ் தொற்று அவர்களது உடலில் மேலும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து நேற்று அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் வைத்தியசாலைலகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...