கொலை சந்தேகநபர் கைதின்போது பரஸ்பர சூட்டில் பலி

அண்மையில் மொணராகலையில் இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்று தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவருக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்றுள்ள பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில், சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.

கடந்த மே மாதம் 31ஆம் திகதி இரவு, மொணராகலை தெனகல்லந்த, மாராவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்  சூட்டில் 50 வயதுடைய ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்று (05) பகல் இக்கொலைச் சந்தேகநபர் தொடர்பில், மொணராகலை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சந்தேகநபரைக் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்போது, சந்தேகநபரினால் பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அவ்வேளையில்,  சந்தேகநபர் இருந்த திசையை நோக்கி பொலிஸார் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் காயமடைந்துள்ளார்.

அவர் சிகிச்சைக்காக மொணராகலை சிறிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில்  உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இத்தேகட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சந்தேகநபரிடமிருந்து துப்பாக்கி மற்றும் கைக்குண்டைக் கைப்பற்றியுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 


Add new comment

Or log in with...