சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோது, பொகவந்தலாவையில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  இருவர்,  கைது செய்யப்பட்டுள்ளதாக,  பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவை, மோர பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்தபோதே,  நேற்று (04) மாலை இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில்  கிடைத்த இரகசிய தகவலினையடுத்து குறித்த பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொண்ட பொலிஸார், குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி, மாணிக்கக்கல் அரிப்பதற்காக பயன்படுத்தும் கூடைகள் உட்பட பல உபகரணங்கள்  மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், எதிர்வரும் தினங்களில் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

(ஹட்டன் விசேட நிருபர் - கே.சுந்தரலிங்கம்)

 


Add new comment

Or log in with...