கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்த 100 வயது மூதாட்டி

இந்தோனேசியாவில் 100 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றை வெற்றிகரமாக முறியடித்து மீண்டுள்ளார். வைரஸின் பிடியிலிருந்து மீண்டு வந்த மிக வயதான இந்தோனேசியர் இவராவார்.

காம்திம் என்றழைக்கப்படும் அவர், சுரபாயா மருத்துவமனையில் ஒரு மாத சிகிச்சைக்குப் பின்னர் இவ்வாரம் வீடு திரும்பினார். வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வந்த அவரின் கதை மற்ற முதியோருக்கு ஊக்கமளிக்கும் என வடக்கு ஜாவா மாநில ஆளுநர் கூறினார்.

மூதாட்டி குணமடைந்ததற்கு அவரின் சுய கட்டுப்பாடும், விடாமுயற்சியும் காரணம் என்றார் அவரது மருமகள். மருந்துகளை நேரத்துடன் உட்கொள்வதோடு, விரைவில் நலமடைய வேண்டும் என்ற மன உறுதியோடு அவர் இருந்ததாகக் கூறப்பட்டது.

வீட்டிலேயே இருந்த காம்திமுக்கு எப்படி வைரஸ் தொற்றியது என்பது தெரியவில்லை.

இருப்பினும் அவருடைய வீட்டுக்கு வந்தவர்கள் அவருக்கு வைரஸை பரப்பியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்தோனேசியாவில் 26,000க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 260 மில்லியன் மக்களைக் கொண்ட இந்தோனேசியா உலகில் மிகக் குறைவான வைரஸ் தொற்றுச் சோதனைகளை மேற்கொள்கிறது. இதனால் வைரஸ் தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை சில மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.


Add new comment

Or log in with...