கொவிட்- 19 நிதியத்தின் வைப்பு 1,217 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,217 மில்லியனாக அதிகரித்துள்ளது.

சோமாவதி ரஜமகா விகாராதிபதி கலாநிதி பஹமுனே ஸ்ரீ சுமங்கள நாயக தேரர் 5,00,000 ரூபாவை நிதியத்திற்கு அன்பளிப்புச் செய்துள்ளதுடன், அதற்கான காசோலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் சோமாவதி புண்ணிய பூமிக்கு சென்ற வேளையில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

நேபாளத்திலுள்ள மருத்துவ மாணவர்களின் பெற்றோர் சங்கம் அன்பளிப்பு செய்த 12,00,000 ரூபாவுக்கான காசோலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

கொழும்பு மாநாகர சபை பணிக்குழாமினர் 12,25,000 ரூபாவை நிதியத்திற்கு அன்பளிப்பு செய்திருந்தனர். அதற்கான காசோலை மேயர் ரோசி சேனாநாயகவினால் நேற்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. தேசிய சம்பள ஆணைக்குழுவின் தலைவர் சந்திராணி சேனாரத்ன 50,000 ரூபாவையும், நீதியமைச்சின் செயலாளர் திருமதி எஸ்.எம். மொஹமட் 25,000 ரூபாவையும், சுற்றுலா, விமான சேவைகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர்  எம்.எஸ்.எஸ்.எஸ் பெர்னாண்டோ 50,000 ரூபாவையும், L H Piyasena & Company (Pvt) Ltd நிறுவனம் ஒரு மில்லியன் ரூபாவையும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வீட்டு வசதிகள் அமைச்சின் பணிக்குழாமினர் 1,89,225 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.

தற்போது இடுகம கொவிட் 19 சுகாதார, பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,217,624,295.76 ரூபாவாகும். உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடையாளர்களும் இக்கணக்கிற்கு பங்களிப்பு செய்துவருகின்றனர். காசோலைகள் அல்லது டெலிகிராப்கள்  ஊடாகவோ www.itukama.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது #207# என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பங்களிப்பை செய்ய முடியும். 0760700700/ 0112320880/ 0112354340/ 0112424012 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.


Add new comment

Or log in with...