09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி

கூட்டுத் தொழுகை,ஜூம்ஆவுக்கு அனுமதியில்லை

மத அனுஷ்டானங்களில் ஈடுபட அடுத்த வாரம் முதல் சுகாதாரத் தரப்பு சகல மத ஸ்தலங்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. இதன் பிரகாரம் எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் மத வழிபாடுகளில் ஈடுபட கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல்களில் தொழுகைகளில் ஈடுபட இதனூடாக அவகாசம் வழங்கப்பட்டுள்ளதோடு இது தொடர்பான விசேட சுற்றுநிருபம் இன்று (02) வெளியிடப்படுவதாக வக்பு சபை தலைவர் சப்ரி ஹலீம்தீன் தினகரனுக்குத் தெரிவித்தார்.

இதற்கமைய ஒரே தடவையில் 30 பேருக்கு தொழுகையில் ஈடுபட இடமளிக்கப்பட இருப்பதோடு ளுஹர் (நண்பகல் தொழுகை) தொழுகை முதல் இஷா தொழுகை வரை பள்ளிவாசல்கள் திறந்திருக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.சுபஹ் (அதிகாலை தொழுகை)யின் போது ஒருமணி நேரம் பள்ளிவாசல்கள் திறக்கப்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான சுற்று நிருபம் சகல பள்ளிவாசல்களுக்கும் இன்று முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார தரப்பினால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த நாடு முழுவதுமுள்ள சகல  பள்ளிவாசல்களையும் திறக்க அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றையடுத்து கடந்த  இரு மாதங்களுக்கு மேலாக கோயில்கள், பள்ளிவாசல்கள், ஆலயங்கள் மற்றும் விஹாரைகளில் எந்தவித மத வழிபாடுகளும் இடம்பெறவில்லை.

கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மத அனுஷ்டானங்களில் ஈடுபட அனுமதிக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இந்த நிலையிலே எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் கட்டுப்பாடுகளுடன் மத வழிபாடுகளை மேற்கொள்ள சுகாதார சேவைப்பணிப்பாளர் அனுமதி வழங்கியிருந்தார்.

கூட்டுத் தொழுகைக்கோ ஜூம்ஆ தொழுகைக்கோ அனுமதி இல்லை. தனித்தனியாக சமூக இடைவெளியை பேணித்  தொழவேண்டும் எனவும் வுளூ செய்யும் பிரதேசம் மூடப்பட வேண்டும் எனவும் கூறிய வக்பு சபை, வழிகாட்டல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது.

சுபஹ் தொழுகைக்கான அதான் (பாங்கு) ற்கு 15 நிமிடத்திற்கு முன்னர் பள்ளிவாசல்கள் திறக்கப்பட்டு 45 நிமிடங்களின் பின்னர் மூடப்படும். மீண்டும் ளுஹர் தொழுகைக்கு 15 நிமிடத்திற்கு முன்னர் திறக்கப்படும் பள்ளிவாசல்கள் இஷா (இரவு தொழுகை) வரை திறக்கப்பட்டு 45 நிமிடத்தின் பின்னர் மூடப்பட வேண்டும் எனவும் வக்பு சபை வெளியிட இருக்கும் சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.(பா)

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...