விகாரைக்குள் ஆயுதங்கள்; தேரருக்கு ஆயுள் தண்டனை

விகாரைக்குள் ஆயுதங்கள்; தேரருக்கு ஆயுள் தண்டனை-Life Sentence to Uva Thanne Sumana Thero

மூன்று தமிழர்கள் உள்ளிட்ட நால்வர் விடுதலை

மாளிகாவத்தை, ஸ்ரீ போதிராஜராம விகாரையின் விகாராதிபதி ஊவ தென்னே சுமண தேரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

T56 துப்பாக்கிகள் இரண்டு, 50 கைக்குண்டுகள், 210 துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட ஆயுதங்களை விகாரைக்குள்  மறைத்து வைத்திருந்த குற்றம் நிரூபணமானதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் (01) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகேயினால் இவ்வுத்தரவு வழங்கப்பட்டது.

2010 ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில், ஜனவரி 02ஆம் திகதி, பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றிற்கு அமைய, குறித்த விகாரையை சுற்றி வளைத்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை கைப்பற்றியிருந்தனர்.

இவ்வழக்கில், ஊவ தென்னே தேரருடன், குற்றம்சாட்டப்பட்ட, அவ்விகாரையைச் சேர்ந்த மாவெல சுபோத தேரர், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என தெரிவிக்கப்படும் பீ. ராஜபாலன், கே. தமிழ்செல்வம், சந்தானம் சுப்ரமணியம் ஆகியோர், வழக்கு விசாரணைகளின் இடையில் குற்றச்சாட்டுகளிலிருந்து நிரபராதிகள் என நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.


Add new comment

Or log in with...