மிரிஸ்ஸ துப்பாக்கிச் சூடு; கைதான மூவரில் இருவருக்கு விளக்கமறியல்

- ஒருவர் நாளை வரை தடுத்து வைப்பு

வெலிகம, மிரிஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக  கைது செய்யப்பட்ட மூவரில், மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற சந்தேகநபரை நாளை (01) வரை தடுத்துவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்தோடு, ஏனைய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 30ஆம் திகதி காலை வெலிகம, மிரிஸ்ஸ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த,  மிரிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபர், சிகிக்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து, மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த சந்தேகநபர் பிரதேசவாசிகளினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார், பிரதான சந்தேகநபர் தப்பிச்செல்ல உதவி புரிந்த சந்தேகநபர்கள் இருவரைக்  கைது செய்ததாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இவ்வாறு கைது செய்யப்பட்ட இச்சந்தேகநபர்கள் மூவரும் மிதிகம, வெலிகம, மிரிஸ்ஸ பிரதேசங்களைச் சேர்ந்தவகளாவர் எனவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சந்தேகநபர்கள் மூவரையும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (31) முன்னிலைப்படுத்தியபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...