பொலிஸாரை இலக்கு வைத்து நாட்டு வெடிகுண்டு; ஒருவர் காயம்

யாழ். வடமராட்சி கிழக்கு வல்லிபுர ஆலயத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின்போது,  பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகிலுள்ள முச்சந்தியில் குறித்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோத மணல் அகழ்வுகள், மணல் கடத்தல்களை தடுக்கும் நோக்குடன் குறித்த பகுதியில் பொலிஸார் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு வருவதுடன், குறித்த சந்திப் பகுதியில் நின்று வீதிச் சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவது வழமையாகும்.

இந்நிலையில், இன்றையதினமும் வழமையான வீதிச் சோதனை நடவடிக்கைக்காக குறித்த சந்திப் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பொலிஸ் வந்திறங்கியபோது, நிலத்தில் இருந்த வெடிபொருள் ஒன்று வெடித்ததினால் குறித்த பொலிஸ் அதிகாரி காயமடைந்துள்ளார்.

அதேவேளை, வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வயர்கள் உள்ளிட்ட பொருட்களும் காணப்படுகின்றன.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், இராணுவத்தினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த வெடிபொருள் மிதிவெடியாக இருக்கலாம் எனவும் , சட்டவிரோத மணல் அகழ்வோர் பொலிஸாரை இலக்கு வைத்து அதனை அவ்விடத்தில் புதைத்து வைத்திருக்கலாம் என, பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் பின்னரே முழுமையான தகவல்களை  வழங்க முடியும் என, பொலிஸார் தெரிவித்தனர்.

(யாழ். விசேட நிருபர் - மயூரப்பிரியன்)


Add new comment

Or log in with...