தேர்தல் தின மனு 6ஆம் நாளாக மீண்டும் ஒத்திவைப்பு

தேர்தல் தின மனு 6ஆம் நாளாக மீண்டும் ஒத்திவைப்பு-Considering General Election Petition Postponed 6th Day

சட்ட மாஅதிபர் சார்பில் அடிப்படை எதிர்ப்பு முன்வைப்பு

ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் அறிவிப்பு மற்றும் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்பு ஆகிய வர்த்தமானிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களின் பரீசீலனை நாளை (27) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் திகதி முதல் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள குறித்த மனு, 6ஆவது நாளாக இன்று (26) முற்பகல் 10.00 மணிக்கு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்கள் புவனேக அலுவிகாரே, சிசிர டி  அப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், 6ஆவது தடவையாக மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் (26) சட்ட மாஅதிபர் சார்பில் முன்வைக்கப்பட்ட அடிப்படை எதிர்ப்பு தொடர்பில் மேலதிக முன்வைப்புகள் எடுத்துரைக்கப்பட்டன.

பொதுத் தேர்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு, சட்டமா அதிபர், கடந்த வெள்ளிக்கிழமை (22) வேண்டுகோள் விடுத்திருந்தார்.


Add new comment

Or log in with...