‘தொழிலாளர்களை திரும்ப அழைக்க எங்கள் அனுமதியை பெற வேண்டும்’

‘’உத்தர பிரதேசத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை திரும்ப அழைக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட மாநில அரசு எங்களிடம் அனுமதி பெற வேண்டும் ’’ என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பத்திரிகையான ‘பாஞ்சஜன்யா’ பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டின் முதுகெலும்பை போன்றவர்கள். உத்தர பிரதேசத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு காலத்தில் சரியாக நடத்தவில்லை. அவர்கள் எங்கள் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு மாநிலத்திலேயே வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இதற்காக ஆணைக்குழு ஒன்றை மாநில அரசு அமைக்க உள்ளது. உ.பி. யை சேர்ந்த தொழிலாளர்களை மீண்டும் அழைக்க விரும்பினால் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் எங்களிடம் அனுமதி பெற வேண்டும்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாப்பது மாநில அரசின் கடமை. புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் திறமைகளை ஆய்வு செய்து அவர்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் பற்றி கமிஷன் தெரிவிக்கும். இதுவரை 23 இலட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மாநிலத்துக்கு திரும்பியுள்ளனர்.இவர்களில் மும்பையிலிருந்து திரும்பிய 75 சதவீதம் பேரும் டில்லியிலிருந்து திரும்பிய 50 சதவீதம் பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி எடுத்து சரியான நடவடிக்கையால் தான் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.


Add new comment

Or log in with...