நேற்று பிறந்தநாள்; இன்று கற்குவாரியில் பலியான சிறுவன்

வவுனியா, சிதம்பரபுரத்தின்  கற்குளம் யுனிட் -02 பகுதியிலுள்ள கற்குவாரியில் தவறி வீழ்ந்து 08 வயதுச்  சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். 

சிதம்பரபுரம் சிறி நாகராஜா வித்தியாலயத்தில் தரம் 02இல் கல்வி கற்கும் நிரோஜிதன் சிமியோன் எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

இன்று (24) மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது,

குறித்த கற்குவாரியில் கல் அகழ்வு பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த கற்குவாரிக்கு சென்ற அச்சிறுவன், கற்குவாரியிலுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் போத்தல் ஒன்றினை கோரியுள்ளான்.

அதன் பின்னர் அப்பகுதியில் வெற்றுப் போத்தல் ஒன்றை தேடிச் சென்ற அச்சிறுவன், கல் அகழ்வு இடம்பெறும் இடத்திற்கு சென்று, கல் அகழ்வுக்காக வெட்டப்பட்ட நீர் நிரம்பிய குழியினுள் தவறுதலாக வீழ்ந்து நீரில் மூழ்கியுள்ளான்.

இவ்வாறு சென்ற சிறுவனை காணவில்லை என்று கல் அகழ்வு இடம்பெறும் இடத்திற்கு சென்ற கற்குவாரியிலுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர், சிறுவன் குழியினுள் உயிருக்கு போராடுவதனை அவதானித்து உடனடியாக அயலவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

அயலவர்களின் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டு, வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வேளையில் சிறுவன் உயிரிழந்துள்ளான். சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தாயின்றி இரண்டு வயதிலிருத்து தந்தை மற்றும் மாமாவின் அரவணைப்பில் இச்சிறுவன் வாழ்ந்து வந்துள்ளான்.

அத்துடன், நேற்றையதினம் (23) இச்சிறுவனின் -08ஆவது பிறந்ததினம் கொண்டாடப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சிதம்பரபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(வவுனியா விசேட நிருபர் - வசந்தரூபன்)


Add new comment

Or log in with...