நெடுங்கால விரோதிகளை நட்பில் ஈர்க்கும் கொரோனா!

பல்வேறு நாடுகளின் எதிர்ப்பினால் உலக அரங்கில் தனிமைப்படும் சீனா

கொரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல்களை மறைத்ததாகவும், சீனாவுக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகவும் உலக சுகாதார நிறுவனம் மீது குற்றம் சாட்டிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அந்த அமைப்பிற்கு அளிக்கப்படும் நிதியுதவியை நிறுத்துவதாக முன்னர் அறிவித்திருந்தார். ஆனால் ட்ரம்பின் குற்றச்சாட்டை உலக சுகாதார நிறுவனம் மறுத்திருந்தது. அதேசமயம் கொரோனா விவகாரத்தில் ஆரம்பம் முதலே வெளிப்படையாக இருந்து வருவதாக சீனாவும் கூறியிருந்தது.

இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ்க்கு ட்ரம்ப் எழுதியுள்ள கடிதத்தில், “அடுத்த 30 நாட்களுக்குள் உலக சுகாதார நிறுவனம் முக்கிய மேம்பாடுகளுக்கு உறுதியளிக்கவில்லை என்றால், நான் உலக சுகாதார நிறுவனத்துக்கு தற்காலிகமாக முடக்கப்பட்ட அமெரிக்காவின் நிதியை நிரந்தமாக்குவேன். உறுப்பினர் குறித்து மறுபரிசீலனை செய்வேன். சீனாவிடம் இருந்து சுதந்திரமாக செயல்படுவதை நிஷரூபிப்பது மட்டுமே ஐ.நா அமைப்புக்கு உள்ள ஒரே வழி. மேலும் நிர்வாக முறையில் சீர்திருத்தம் மேற்கொள்வது குறித்து ஏற்கனவே டெட்ராஸ{டன் விவாதித்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் 73வது கூட்டத்தின் முதல்நாளன்று கொரோனா நோய்த்தொற்றின் தோற்றம் மற்றும் பரவல் தொடர்பாக சுயாதீன விசாரணை விரைவில் தொடங்குமென உலக சுகாதார நிறுவனம் கூறியிருந்தது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த விசாரணைக்கு ஆதரவும், 2 பில்லியன் டொலர் நிதியுதவியும் அளிப்பதாக சீனா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வரை உலக சுகாதார அமைப்பின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் விசாரணை முடிவை தனக்கு சாதகமாக மாற்ற சீனா முயற்சிக்கும் என நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

“கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம்; அது சீனாவில் உள்ள பரிசோதனை நிலையத்தில் உருவாக்கப்பட்டது” என அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.

உலக சுகாதார அமைப்பின் இரண்டு நாள் மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டிய பொருள் குறித்து, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தன. இந்தத் தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 100க்கும் நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

இந்த தீர்மானத்திற்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இந்த தீர்மானம் தவறானது. கொரோனா வைரசுக்கு எதிரான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியது.

இதன் பின்னர் உலக சுகாதார நிறுவனக் கூட்டத்தில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் பேசும் போது, “கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் விரிவான விசாரணை நடத்துவதை சீனா வரவேற்கிறது. இந்த விசாரணை அறிவியல் மற்றும் துறை ரீதியாக நடத்தப்பட வேண்டும். உலக சுகாதார நிறுவனம் தலைமையில் விசரணை நடக்க வேண்டும்” எனக்கூறினார்.

இதன் மூலம் கொரோனா விவகாரத்தில் நடக்கும் விசாரணையில் ஏற்படும் விளைவுகளைத் தவிர்க்க சீன அரசுக்கு பல வழிகளை வழங்க ஜிங்பிங் முயற்சிப்பதுடன் முடிவுகளை சீனாவிற்கு சாதகமாக மாற்றவும் அவர் முயற்சிக்கலாம் என நிபுணர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் குறித்து பாகுபாடு இல்லாத, சுதந்திரமான, விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் மாநாட்டின் உத்தேச தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்சினையில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா உட்பட பல நாடுகள் தொடர்ந்து பல்வேறு புகார்களை கூறி வருகின்றன.

இத்தீர்மானத்தின்படின் இந்த வைரஸ் பரவல் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட உள்ளது. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் இருந்து நடத்தப்படும் இந்த இரண்டு நாள் கூட்டத்தில் 'வீடியோ கொன்பரன்ஸ்' வாயிலாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

கொரோனா குறித்து விசாரணை நடத்தும் தீர்மானத்திற்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதால் வேறு வழியில்லாமல் அந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதாக சீனா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் கூறியதாவது:

“வைரல் பரவலை சரியான நேரத்தில் தடுத்து நிறுத்தினோம். வைரஸ் பரவல் மற்றும் சிகிச்சை குறித்து எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்துத் தகவல்களையும் பகிர்ந்து கொண்டு உள்ளோம். வைரசின் தன்மை குறித்தும் சரியான நேரத்தில் தெரிவித்தோம். மற்ற நாடுகளுக்கு உதவுவதற்கு தேவையான அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொண்டோம். இந்த வைரசுக்கு எதிராக உலக நாடுகள் எவ்வாறு செயல்பட்டன என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். வைரஸ் பரவல் தொடர்பான நடவடிக்கைகள் எடுப்பதற்காக உலக சுகாதார அமைப்புக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிதியை சீனா அளிக்கும்”.

இவ்வாறு, அவர் கூறினார்.

இதுஒருபுறமிருக்க கொரோனா பரவல் உலகம் முழுக்க வேகம் எடுத்துள்ள நிலையில் தற்போது சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கி உள்ளது. ரஷ்யாவில் நாளுக்கு நாள் கொரோனா வேகமாக அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தற்போது வேகமாக தினமும் 10 ஆயிரம் பேர் என்ற வீதத்தில் பரவத் தொடங்கி உள்ளது. அங்கு சுமார் 3 இலட்சம் கொரோனா தொற்றாளர்கள் உள்ளனர். உலகிலேயே கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது பெரிய நாடாக ரஷ்யா மாறியுள்ளது. அங்கு 2800 பேர் வரை இதுவரை பலியாகி உள்ளனர்.

ஆனால் கொரோனா பரவல் தொடங்கிய சமயத்தில் சீனாவை உலக நாடுகள் எதிர்த்தது போல ரஷ்யா எதிர்க்கவில்லை. ரஷ்யா தொடர்ந்து சீனாவிற்கு தனது ஆதரவை அளித்து வந்தது. அதிலும் கொரோனா குறித்து ரஷ்யா எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. அமெரிக்கா தொடர்ந்து “கொரோனா பரவலுக்கு சீனாதான் காரணம்” என்று கூறி வந்தது. ஆனால் ரஷ்யா அதை கவனத்தில் கொள்ளவில்லை. ரஷ்யா - சீனா இடையேயான நட்பு எப்போதும் போல இருந்தது.

அதேபோல் சீனா மீது வைக்கப்பட்ட புகார்களையும் ரஷ்யா எதிர்த்தது. கொரோனா வைரஸ் செயற்கையாக உருவானது என்ற வாதத்தை ரஷ்யா ஏற்கவில்லை. அமெரிக்கா சிரமப்பட்டு உருவாக்கிய இந்த புகாரை உலக நாடுகள் பல ஏற்றுக் கொண்டுள்ளன. இந்தியாவும் கூட ஏற்கும் நிலையில் உள்ளது. ஆனால் ரஷ்யா இதில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. அத்தோடு சீனாவும் ரஷ்யாவிற்கு மருத்துவ ரீதியான உதவிகள் செய்து வந்தது. தனது மருத்துவ குழுவை சீனா ரஷ்யாவிற்கு அனுப்பியது.

நிலைமை இப்படி இருக்க இரண்டு கம்யூனிஸ்ட் நாடுகளுக்கும் இடையே தற்போது பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்டின் உறவிலும் கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளது. இதற்கு முதல் காரணம் சீனாதான்.

ரஷ்யா கடந்த மாதம் சீனா அருகே இருக்கும் தனது எல்லைகளை மூடியது. கொரோனா பரவலை தடுப்பதற்காக ரஷ்யா தனது எல்லையை மூடியது. இதை சீனா கடுமையாக கண்டித்த காரணத்தால் இரண்டு நாடுகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.

“சீனாவிற்கு அருகே இருக்கும் எல்லைகளை ரஷ்யா மூடியதை ஏற்க முடியாது. ரஷ்யா எங்களிடம் அறிவிக்காமல் எல்லையை மூடியதை ஏற்க முடியாது” என்று சீனா கூறியது.

இது சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வார்த்தைப் போராக மாறியது. அதன் பின் ரஷ்யாவில் வேகமாக கொரோனா அதிகரித்து வருகிறது. அங்கு 8 நாட்களில் 1 இலட்சம் பேர் கொரோனா நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். உலகில் இரண்டாவது பெரிய கொரோனா பாதிக்கப்பட்ட நாடாக ரஷ்யா மாறியுள்ளது.

இதனால் மக்கள் சீனா மீது கோபம் கொண்டனர். இப்படி அதிகரிக்கும் கொரோனா பரவலால் சீனாவை கண்டிப்பாக எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ரஷ்யா சென்றுள்ளது. அதேபோல் ஊரடங்கு காரணமாக ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்னொரு பக்கம் சீனா தொடர்ந்து ஏற்றுமதியை செய்து வருகிறது. ரஷ்யாவிற்கு இது ஒரு வகையில் வெறுப்பை உண்டாக்கி உள்ளதால் சீனா மீது ரஷ்யா கோபத்தில் உள்ளது. அதேபோல் அந்நாட்டு ஜனாதிபதி புட்டினுக்கும் அரசியல் ரீதியான அழுத்தங்கள் உள்ளன.

“கொரோனா வைரஸை சரியாக கட்டுப்படுத்தவில்லை, ஜனாதிபதி தலைமறைவாகி விட்டார்” என்று புட்டின் மீது புகார் இருக்கிறது. இதனால் தனக்கு வைக்கப்படும் அரசியல் ரீதியான அழுத்தத்திற்கு கொரோனா வைரஸ்தான் காரணம் என்று புட்டின் நினைக்கிறார். இதற்கு சீனாதான் காரணம் என்ற கோபத்தில் அவர் இருக்கிறார். இதுவும் கூட சீனா - ரஷ்யா இடையே முரண்பாடு வரக் காரணம் ஆகும். அதேபோல் இன்னொரு பக்கம் ரஷ்யா - அமெரிக்கா இரண்டு நாடுகளும் கொரோனா விடயத்தில் ஒன்றாக சேரத் தொடங்கி உள்ளன. பகைமை கொண்டிருந்த நாடுகளே இப்போது இணையத் தொடங்கியுள்ளன.

ரஷ்யாவும் அமெரிக்காவும் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றும் என்று இரண்டு நாடுகளும் உறுதி பூண்டு இருக்கின்றன. இதற்காக இரண்டு நாடுகளும் அறிக்கை வெளியிட்டன.

“பல வருட எதிரிகள் இப்போது ஒன்றாகி உள்ளனர். கொரோனாவை ஒன்றாக எதிர்ப்போம்” என்று இரண்டு நாடுகளின் தலைவர்களும் கூறியுள்ளனர். இது சீனாவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இப்போது உலக அளவில் சீனா தனக்கு நண்பன் இல்லாத நிலையை அடைந்துள்ளது.

இரு நாட்டுத் தலைவர்களான ட்ரம்பும், புட்டினும் இதற்காக தொலைபேசி வழியாக பேசிக் கொண்டனர். இருவரும் நெருக்கம் ஆகியுள்ளனர். அமெரிக்காவுடன் ரஷ்யா நெருக்கம் காட்டுவது சீனாவுடனான அதன் உறவு முறிவதன் அறிகுறியாகவே நோக்கப்படுகின்றது. பல வருடங்களாக நெருக்கமான நட்பு நாடுகளாக இருந்த ரஷ்யா - சீனா இடையே ஏற்பட்டுள்ள இந்த விரிசலானது இன்னும் பெரிதாகும் என்று அவதானிகள் கூறுகிறார்கள்.

(ழுNநு ஐNனுஐயு வுயுஆஐடு)

 

 


Add new comment

Or log in with...