அரசு வழங்கும் 5,000 ரூபா கொடுப்பனவில் மோசடி

கிராமசேவகர் சேவை இடை நிறுத்தம்

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5,000 ரூபா கொடுப்பனவு பயனாளிகளுக்கு வழங்கும் செயற்பாட்டில் ஆறு போலிப்பெயர்களை பட்டியலில் உட்படுத்தி மோசடி செய்த திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராமசேவகர் ஒருவரின் சேவை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.

இக்கிராம உத்தியோகத்தரின் மோசடி தொடர்பில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து ஆரம்ப விசாரணைக்காக மூவர் கொண்ட குழு அவரால் நியமிக்கப்பட்டது.

 இதில் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ்.பரமேஸ்வரன்,மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன்,மாவட்ட செயலக நிர்வாக  உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரஞ்சன் ஆகியோரடங்கிய குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணையின் அறிக்கைக்கேற்ப இந்த உத்தியோகத்தரின் சேவையை மாவட்ட அரசாங்க அதிபர் இடைநிறுத்தியுள்ளார்.

மேலும் இந் நபர் தேசிய அடையாள அட்டை வழங்கும் நடைமுறையின்போது அறவிடுகின்ற பணத்தையும் பிரதேச செயலகத்திற்கு வழங்காமல் மோசடி செய்தமை தொடர்பில் இவ்விசாரணையில் வெளிவந்ததாகவும் இது தொடர்பிலான பூரண அறிக்கை தமக்கு கிடைக்கப்பெற்றதும் உரிய மேலதிக நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

அன்புவழிபுரம் தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...