பேராபத்திலிருந்து காப்பாற்றப்பட்ட சுமார் 180 மீனவர்கள்

பேராபத்திலிருந்து காப்பாற்றப்பட்ட சுமார் 180 மீனவர்கள்-180 Fisherman Instructed by Fisheries Department to Escape From Amphan Cyclone

கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள சூறாவளி நிலைமை காரணமாக ஆழ் கடலுக்குச் சென்ற நிலையில், தாழமுக்க வலயத்திற்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த 30 மீனவப் படகுகள் பேராபத்திலிருந்து காப்பற்றப்பட்டுள்ளன.

மீன்பிடி திணைக்களத்தினால் வானொலி அலைவரிசை மூலம் வழங்கப்பட்ட ஆலோசனைகளைப் பின்பற்றியதன் மூலம், புயலிலிருந்து தப்பித்து இந்தோனேஷியா கடற்பரப்பை நோக்கி அவர்களை அனுப்பியதன் மூலம், ஏற்படவிருந்த அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாக மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த படகுகள் இந்தோனேஷியா கடற்கரையிலிருந்து 200 மைல் தொலைவில், அதாவது இந்தோனேஷியாவுக்குச் சொந்தமான கடற்பரப்பில் தரித்து நின்றதோடு, தற்போது அவர்களது பாதையில் நிலைமை சீரடைந்திருப்பதால் அவர்கள் மீண்டும் இலங்கை நோக்கி பயணித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை, காலி மாவட்டங்களிலிருந்து சென்ற இப்படகுகளில் சுமார் 180 பேர் உள்ளதாகவும், அவர்களுக்கு எவ்வித ஆபத்துகளும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. மீண்டும் பயணிக்கும் நிலையில் அவர்களுக்கு எரிபொருள் போதாத நிலை ஏற்படுமாயின், அவர்களுக்கு அவசியமான எரிபொருளை வழங்குவதற்கு குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து எரிபொருளுடனான ஒரு சில படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மீன்பிடித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, குறித்த மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உரிய உதவியை வழங்குவதற்கும், நாளையதினம் (21) விசேட கடற்படை கப்பலொன்றை அவர்களை நோக்கி அனுப்பவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. கடலின் நிலைமை சாதாரண நிலையில் காணப்படுமாயின், இன்னும் ஓரிரு தினங்களில் அனைத்து படகுகளும் எவ்வித ஆபத்துகளுமின்றி மீண்டும் கரைக்கு அழைத்து வர முடியும் என, மீன்பிடித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


Add new comment

Or log in with...