கிழக்கு மாகாணத்தில் முதலில் தொடங்கும் பாடசாலைகள் அனைத்திற்கும் இலத்திரனியல் வெப்பமானி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு, மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய, மாகாணத்தில் முதலில் க.பொ.த. உயர்தர வகுப்புகளை கொண்ட 300 பாடசாலைகள் வரை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, அப்பாடசாலைகளுக்கு இலத்திரனியல் வெப்பமானி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, அப்பாடசாலைகளை முழுமையாக தொற்றுநீக்கம் செய்வதற்கும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இம்மாகாணத்தில் பாடசாலைகள் தொடங்கப்படுவதற்கு முன்னர், கொரோனா தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பில் மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், விளம்பரங்களுடன் கூடிய பதாகையை பாடசாலைகளில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும், குறித்த மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு, அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில் வலய மட்டம், கோட்ட மட்டம் மற்றும் பாடசாலை மட்டத்தில் பெற்றோரை சந்திக்கவும், ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாடசாலைகள் தொடங்க ஒரு வாரத்திற்கு முன்னர், இவ்வேலைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யுமாறும், அதிபர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாடசாலைகள் தொடங்கப்படுவதற்கு முன்னர் அப்பாடசாலைகளுக்கு நீர் விநியோகத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அனைத்து பாடசாலைகளிலும் கை கழுவுதற்கான நிலையம் அமைத்தல், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு விசேட அடையாள அட்டைகளை வழங்குவதற்கான நடவடிக்கை, அனைத்து மாணவர்களுக்கும் சுகாதார அட்டை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
(ஹஸ்பர் ஏ. ஹலீம், திருமலை மாவட்ட விசேட நிருபர் - அப்துல் பரீட்)
Add new comment