பண்டாரநாயக்க மாவத்தை, ஜா-எல, பேருவளை பகுதிகளைச் சேர்ந்தவர்கள்
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரொனோ நோயாளிகளில் பூரண சுகமடைந்த 55 பேர் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களை வழியனுப்பி வைக்கும் வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் இடம் பெற்றது.
இதன் போது காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பரின் ஏற்பாட்டில் அவர்களுக்கான பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தண்ணீர் போத்தல்கள் என்பனவும் வழங்கப்பட்டதுடன் சிறுவர்களுக்கான அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எஸ். ஜாபீர், மட்டக்களப்பு கல்லடி 231 படைப்பிரிவின் பிரிகேடியர் பல்லேகும்புர மற்றும் கட்டளை அதிகாரி மேஜர் எஹெலபொல, காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் உட்பட இராணுவ உயரதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது வைத்தியசாலையின் நுழைவாயிலில் தேசியக் கொடிகளை அசைத்து அவர்களை வழியனுப்பி வைத்தனர்.
இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இரண்டு பஸ் வண்டிகளில் இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டதையடுத்து இது வரை 62 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
அவர்களில்; பூரண சுகமடைந்த 55 பேரே இன்று அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தம்மை பராமரித்த காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஊழியர்கள் மற்றும் இராணுவத்தினர் பொலிசார் காத்தான்குடி மக்கள் அனைவருக்கும் தமது நன்றிகளை தெரிவிப்பதாகவும் சுமடைந்து சென்றவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
இவர்கள் கொழும்பு பண்டாரநாயக்க, மாவத்தை மற்றும் பேருவளை, மத்துகம, ஜாஎல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, குறித்த 55 பேருடன் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 61 பேர் இன்று குணமடைந்துள்ளதாக, தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று (10) முற்பகல் 10.00 மணியளவில், தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 260 இலிருந்து 321 ஆக அதிகரித்துள்ளது.
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)
Add new comment