நெருக்கடியில் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது

நெருக்கடியில் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது-Wimal Weerawansa on TNAs Move

அரசியல் நோக்கம் அவர்களிடம் இருக்கவில்லை

நெருக்கடியான நிலையில் கூட்டமைப்பு அரசின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தமை ஏற்றுக்கொள்ளக்கூடிய,வரவேற்கத்தக்க செயற்பாடாகுமென .அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார். 

பிரதமருக்கும் த.தே.கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,

பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் கடந்த 04 ஆம் திகதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களது பங்குப்பற்றலுடன் முக்கிய பேச்சு நடைபெற்றது.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரதமரிடம் கோரிக்கை உள்ளடங்கிய பத்திரத்தைச் சமர்ப்பித்தனர். இது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு கூட்டமைப்பினர் பிரதமரிடம் எவ்வித கோரிக்கைகளையும் விடுக்கவில்லை.அரச தரப்பினருக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் அரசியல் ரீதியான நிலைப்பாடு வேறுபட்டதாகவே காணப்படுகின்றது.

நெருக்கடி நிலையில் அரசின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூட்டமைப்பினர் முன்வந்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியது என்றார்.

கொரோனா தொற்றினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு 5,000ரூபா நிவாரணத் தொகை வழங்கியுள்ளது.இதனையும் எதிர்த்தரப்பினர் தங்களின் அரசியல் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். அரசு 20 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் வலியுறுத்துகின்றார்கள்.கடந்த ஆட்சியில் இயற்கை அனர்த்தத்தாலும், அரசின் முறையற்ற செயற்பாடுகளினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் நட்டஈடு ஏதும் இதுவரை காலமும் வழங்கப்படவில்லை. இவர்கள் எமது அரசைத் தற்போது விமர்சிப்பது நகைப்புக்குரியது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும், சவால்களை வெற்றிக்கொள்ளவும் எதிர்த்தரப்பினர் எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.


Add new comment

Or log in with...