மற்றையவர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில்
அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றிற்கு உள்ளாகி அடையாளம் காணப்பட்ட இருவரில் ஒருவர் சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னர் வீட்டிற்கு மீள அனுப்பப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அக்கரைப்பற்றை சேர்ந்த ஆண் ஒருவரே இவ்வாறு முழுமையாகக் குணமடைந்து இன்று வீடு திரும்பினார்.
வெலிகந்தை வைத்தியசாலையிலிருந்து கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் அலுவலகத்திற்கு சொந்தமான அம்புலன்ஸில் அக்கரைப்பற்றிற்கு அழைத்துவரப்பட்டு அவரின் வீட்டில் இறக்கிவிடப்பட்டார் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு. சுகுணன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த குறித்த நபர் இம்மாதம் 08 திகதி மாலை சிகிச்சைக்காக வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.
தொற்றுக்குள்ளான நபர் கட்டார் நாட்டுக்கு சென்று கடந்த மாதம் 16 ஆம் திகதி நாடு திரும்பியிருந்தார். இவரது மாதிரிகள் இம்மாதம் 6 ஆம் திகதி கண்டி போதனா வைத்தியசாலைக்கு பரிசோதனை ஆய்விற்காக அனுப்பப்பட்டது. இதற்கமைவாக அவரது மருத்துவ அறிக்கை இம்மாதம் எட்டாம் திகதி சுகாதார தரப்பினருக்கு கிடைக்கப் பெற்றிருந்தது.
இதன் பிரகாரம் குறித்த நபருக்கு கொவிட் 19 தொற்று உள்ளதென அடையாளம் காணப்பட்டு வெலிகந்தை ஆதார வைத்தியசாலைக்கு இவர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இரு வாரங்களின் பின்னர் மருத்துவ பரிசோதனைகள் இவரிடம் மேற்கொள்ளப்பட்டன. இம்மருத்துவ மாதிரி அறிக்கைகள் கிடைக்கப் பெற்றதனைத் தொடர்ந்து இதில் இவருக்கு கொரோனா தொற்று இல்லை என அறிக்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில் மேலும் ஆய்வுகள் திரும்பவும் மேற்கொள்ளப்பட்டு அவர் குணம் அடைந்து விட்டார் என்ற அடிப்படையில் வீடு செல்ல இன்று (25) மாலை அனுமதிக்கப்பட்டார்.
இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளவர் வீட்டில் மேலும் இரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் பிரகாரம் இந்நபர் சுகம் பெற்றுவிட்டார் என அடையாளம் காணப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த நபர் நேற்று மாலை அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்திற்கு அம்பியுலன்ஸ் வண்டி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு வீடு திரும்பிய குறித்த நபர் கொரோனா தொற்று நோய் தடுப்பு செயற்பாட்டிற்கு அமைவாக இன்று (25) முதல் எதிர்வரும் மே 09 ஆம் திகதி வரை 14 நாட்கள் கட்டாய தனிமைப் படுத்தலுக்கு உட்பட வேண்டுமென அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கொரோனா தொற்றிலிருந்து நீங்கி வீடு திரும்பிய குறித்த நபரின் மனைவி தற்போது வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிசிச்சை பெற்று வருகின்றார். இவரது மாதிரிகளும் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவரின் இறுதி மருத்துவ அறிக்கைகள் நெகடிவாக அமையுமிடத்து மிக விரைவில் அவரும் வீடு திரும்பக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் மேலும் தெரிவித்தார்.
குறித்த நபர் வசித்து வரும் பிரதேசத்தில் கிருமித் தொற்று நீக்கும் செயற்றிட்டம் முன்னடெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் தொடர்புடைய 80 பேர் பொலன்னறுவை தம்மின்ன பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இது தவிர அக்கரைப்பற்று 19 பகுதி தனிமைப்படுத்தல் சூழ்நிலையை தற்போது எதிர்கொண்டுள்ள போதிலும் எதிர்காலத்தில் இத்தடையினை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற மகிழ்ச்சியான தகவலை தெரிவிக்க விரும்புகிறேன் என கூறினார்.
(பாறுக் ஷிஹான், அட்டாளைச்சேனை தினகரன் நிருபர் - எம்.ஏ. றமீஸ்)
Add new comment