ஏப்ரல் 13 கைதான ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை

ஏப்ரல் 13 கைதான ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை-Ranjan Ramanayake-Arrested on Apr 13-Released on Bail

பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில், கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்றையதினம் (20) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஐ.தே.க. முன்னாள் எம்.பி. ரஞ்சன் ராமநாயக்க, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில், மாதிவலவிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத் தொகுதியில் வைத்து கடந்த வாரம் (13) மிரிஹான பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, ஏப்ரல் 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவருக்கு, இன்று (20) வரை அவருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டது.

வேன் ஒன்றில் வந்த அவரது உடற்பயிற்சி சிகிச்சையாளர் (Physiotherapy) என தெரிவிக்கப்படும் நபர் ஒருவர் ஊரடங்கு அனுமதிப்பத்திரமின்றி, மாதிவெலவிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத் தொகுதியில் நுழைய முற்பட்ட வேளையில், அவரை பொலிஸார் விசாரித்துக் கொண்டிருந்தபோது, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...