பாராளுமன்றத்தை கூட்டுமாறு சஜித் ஜனாதிபதியிடம் கோரிக்கை

உலகளாவிய கொரோனா தொற்று பரவல் காரணமாக எமது நாடும் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும் நிலையில் அது குறித்தும் பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாப்பதற்குமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும்  உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

தற்போதைய நிலையில் தேர்தல் ஒன்றை உரிய காலத்துக்குள் நடத்தமுடியும் என்று எதிர்பார்க்க முடியாத ஒரு சூழ்நிலை தொடர்வதால் காலம் கடத்தாமல் பாராளுமன்றத்தை கூட்டி அனைவரும் ஒன்றிணைந்து ஒரு முடிவு எடுப்பதற்கான வாய்ப்பை பெற்றுத் தருமாறும் அவர் ஜனாதிபதியிடம் கேட்டிருக்கின்றார்.

இவர் நேற்று முன்தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விடுத்த வேண்டுகோளில் பாராளுமன்றத்தை கூட்டும் பட்சத்தில் அங்கு ஏற்படக்கூடிய செலவினங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய கொடுப்பனவுகள், சம்பளம், உணவு மற்றும் இதர செலவுகள் அனைத்தையும் தியாகம் செய்யவும் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் இன்னமும் சரியான ஒரு தீர்க்கமான முடிவை எட்ட முடியாத நிலையில் தேர்தல் ஆணைக்குழு இருப்பதாக நாம் அறிய வருகின்றோம். இவ்வாறான சூழ்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு மூன்று மாதங்கள் கடக்கும் காலம் மிக அண்மித்து விட்டது.

அதன் பின்னர் எந்த வகையில் தேர்தலை நடத்துவது என்பது குறித்தும் நாங்கள் சிந்திக்க வேண்டியுள்ளது.

சிலவேளை தேர்தல் ஆணைக்குழு தலைவரின் கருத்துப்படி ஜூலை மாதம் வரை தேர்தலை நடத்த முடியுமா? என்ற அச்சம் காணப்படுவதாக அறிய வருகின்றோம்.

இந்த நிலையில் பாராளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குறியாகும் ஒரு நிலைமை உருவாவது தவிர்க்க முடியாததாகும். இதனை ஆரோக்கியமானதாக எம்மால் கருத முடியாது.

எனவே தான் இம்மாத இறுதிக்குள் மே மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டி இந்த நெருக்கடி நிலைகள் தொடர்பாக விவாதித்து அல்லது கலந்துரையாடிய ஒரு ஆரோக்கியமான முடிவை எடுப்பதற்கு ஒரு வாய்ப்பை பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகளுக்கு பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம். இதன்மூலம் ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது வேறு கட்சிகளோ எந்தவிதமான அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம் கிடையாது.

இன்றைய நிலையில் நாட்டு மக்களுக்கு ஜனநாயக அரசியல் மீதான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை பெற்றுக் கொடுக்க வேண்டியதே இப்போதைய அவசியமானதாகும்.

இதனை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்ற அடிப்படையில் தங்களுக்கு கடப்பாடு உண்டு என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 

எனவே உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டி அதற்கான வாய்ப்புகளைப் பெற்றுத் தருமாறு தங்களிடம் அனைத்துக் கட்சிகள் சார்பாக வேண்டுகோள் விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எம்.ஏ.எம் நிலாம்


Add new comment

Or log in with...