ரூ. 10 இலட்சம் கொள்ளை சம்பவம்; இருவர் கைது

தணமல்வில பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமொன்றில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
தணமல்வில, வலகருவ, உஸ்வெல்ல பிரதேசத்தில் கடந்த 14ஆம் திகதி இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
வீடொன்றுடன் அமைந்துள்ள கடையொன்றுக்கு முகமூடி அணிந்து வந்த குழுவினர், கத்தியைக் காட்டி அச்சுறுத்தியதோடு, வீட்டு உரிமையாளரின் கைகளைக் கட்டிவிட்டு ரூபா 1,027,700 பணம் மற்றும் உடைமைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
 
இது தொடர்பில் தணமல்வில பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். 
 
இதற்கமைய, உஸ்வெல்ல பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவர் நேற்று (16) பிற்பகல் 2.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவரிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய நேற்று மாலை 6.30 மணியளவில் கல்மில்ல, கெட்டிய, துங்கம பிரதேசத்தில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இச்சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, இக்கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தட்ட மோட்டார் சைக்கிளொன்று பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது.
 
குறித்த மோட்டார் சைக்கிளை சோதனைக்கு உட்படுத்தியபோது, அதன் ஆசன உறைக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.  
 
எம்பிலிபிட்டிய மற்றும் ஹல்மில்லகெட்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 20, 24 வயதுகளையுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
 
இச்சந்தேகநபர்களை இன்று (17) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 
 
அத்தோடு, இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேநபர்களை கைது செய்ய வேண்டியுள்ளதால் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Add new comment

Or log in with...