இது வரை 16 பேர் கைது
சமூக ஊடகங்களில் கொரோனா வைரஸ் தொடர்பில் பல்வேறு போலிச் செய்திகளை பரப்பியதாக 07 சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி முதல் நேற்று (12) வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதில் இரண்டு சந்தேக நபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (10) பெலிகல மற்றும் கட்டுகஸ்தோட்டையில் கைது செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் (11) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஒருவருக்கு ஏப்ரல் 22 திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நேற்று முன்தினம் (11) வெலிமடை, கடவத்தை, ராகமை பகுதிகளில் மேலும் 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதோடு, அவர்களுக்கு ஏப்ரல் 16ஆம் திகதி வரையும், நேற்றையதினம் (12) நொச்சியாகம பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரை இன்று (13) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவுவது குறித்து பல்வேறு வகையான போலிப் பிரசாரங்களை வெளியிட்டதாக தெரிவித்து 16 சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Add new comment