கொரோனாவுக்குக் கைகொடுத்து உதவும் மலேரியா தடுப்பு மருந்து Hydroxychloroquine

இந்தியாவிடமிருந்து மருந்தைப் பெறுவதற்கு ட்ரம்ப் பிரயோகித்த அழுத்தத்தின் காரணம்!

அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் இருந்து ஒரு கப்பல் அந்த நாட்டின் மேற்குப் பகுதிக்கு வர வேண்டுமானால் பல்லாயிரம் கி.மீ அட்லாண்டிக் கடலில் பயணம் செய்து, தென் அமெரிக்க கண்டம் முழுவதையும் சுற்றிக் கொண்டு பின்னர் அட்லாண்டிக் கடலில் பல ஆயிரம் கி.மீ. பயணித்து, சுமார் அண்டார்டிகா வரை போய், அமெரிக்காவின் மேற்குப் பகுதியை அடையக் கூடிய நிலை இருந்தது.

கொல்கத்தாவில் இருந்து ஒரு கப்பல் மும்பைக்கு வர வேண்டுமானால், எப்படி இலங்கையை சுற்றி வர வேண்டுமோ அப்படி!

ஆனால், இந்த இரு அமெரிக்க கண்டங்களுக்கு இடையே மத்திய அமெரிக்காவில் பனாமா நாட்டின் ஓரிடத்தில் ஒரு சிறிய நீர் வழிப்பாதை இந்த இரு கடல்களையும் இணைக்கிறது. மிகக் குறுகிய இந்த நீர் வழிப் பாதையில் சிறிய படகுகள் மட்டுமே செல்ல முடியும். இங்கே பெரும் கப்பல்கள் பயணிக்க வேண்டுமானால், 82 கி.மீ தூரத்துக்கு இந்த நீர் வழிப்பாதையை அகலப்படுத்தியாக வேண்டும். இரு புறமும் அடர்ந்த காடுகள் கொண்ட இந்த நீர் வழிப்பாதையை அகலப்படுத்தும் வேலையில் முதலில் பிரான்ஸ் இறங்கியது. அப்போது பிரான்ஸ் கட்டுப்பாட்டில் பனாமா இருந்தது.

1881இல் ஆரம்பித்த வேலை மாதம் 200 பேர் என ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பலி கொண்டது. இந்த உயிர்ப் பலிகளுக்கு பணியின் போது ஏற்பட்ட விபத்துகள் காரணமல்ல. காரணம் நுளம்பு! மரங்கள், நீர் நிலைகள், மலைகள், வருடத்தில் 8 மாதங்கள் மழை என மிகக் கரடுமுரடான இந்த காட்டுப் பகுதியின் நுளம்புகளால் ஏற்பட்ட மலேரியா, மஞ்சள் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு பல்லாயிரம் தொழிலாளர்களின் உயிர்கள் பலியாயின. இதனால் 1889ல் இந்தப் பணியை அப்படியே விட்டுவிட்டு விலகி விட்டது பிரான்ஸ்.

ஏன் இந்த மலேரியா பரவுகிறது. அதற்கு நுளம்புகள்தான் காரணம் என்பது கூட அப்போது அறியப்படவில்லை. இதையடுத்து 1904ம் ஆண்டில் அமெரிக்கா இந்த வேலையை கையில் எடுத்தது. இந்த இடைவெளியில் நுளம்புகளால்தான் மலேரியா பரவுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதனால், பனாமா கால்வாய் பணியை தொடக்கியவுடனேயே அமெரிக்கா செய்த முதல் வேலை மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடித்ததுதான்.

தென் அமெரிக்க கண்டத்தின் பழங்குடி மக்கள் 'குளிர்' காய்ச்சலுக்கு (மலேரியா என்று தெரியாமல், நுளம்பு மூலம் பரவுவதும் புரியாமல்) பயன்படுத்திய மருந்து தான் Quine. இந்தக் கண்டத்தின் பல நாடுகளிலும் காணப்படும் ‘சின்கோனா’ எனப்படும் மரத்தின் பட்டையில் இருந்துதான் இந்த மருந்தை பழங்குடி மக்கள் தயாரித்தனர். இப்போது தயாரிக்கப்படும் ஹைட்றோக்ஸிகுளோரோகுயின் ( Hydroxychloroquine ) மருந்துக்கு இதுதான் அடிப்படை.

பிளாஸ்மோடியம் எனப்படும் வைரசும் அல்லாத, பக்டீரியாவும் அல்லாத ஒரு நுண்ணுயிரிதான் மலேரியா நோய்க்குக் காரணம். இதைப் பரப்புவது அனோபிலிஸ் எனப்படும் வகையைச் சேர்ந்த பெண் நுளம்புகள்.  மனிதர்களை குத்தி இரத்தத்தை உறிஞ்சும் போது இந்த நுளம்புகளின் உடலில் இருந்து மனிதர்களுக்குள் ஊடுருகிறது பிளாஸ்மோடியம்.

இந்த பிளாஸ்மோடியத்திலும் 4 வகை உண்டு. அதில் 90 சதவீத மலேரியாவைப் பரப்புபவை பிளாமோடியம் ஃபால்சிபாரம்   ரக நுண்ணியிரிதான்

மனித உடலுக்குள் நுழைந்தவுடன் இந்த நுண்ணியிரி கல்லீரலில் போய் தங்கி பல்கிப் பெருகி இரத்தத்தில் கலக்கும். (இந்த நேரத்தில் மனிதனைக் கடிக்கும் நுளம்புக்கும் இந்த நுண்ணியிரி பரவும்).

மனித இரத்தத்தின் சிவப்பு அணுக்களில் நுழையும் இந்த பிளாஸ்மோடியும் அங்கு இலட்சக்கணக்கில் பெருகி, சிவப்பு அணுக்களையே சிதறடித்துக் கொண்டு உடலின் பல பகுதிகளையும் பாதிக்கும். இதுதான் மலேரியா. உலகமே கொரோனா பீதியில் ஆழ்ந்திருக்க இப்போ எதற்கு இந்த நுளம்புக் கடி? காரணம் இருக்கிறது.. இப்போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பயன்படுத்த முயலும் முதல் மருந்து, மலேரியாவை கட்டுப்படுத்த உதவும் ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின்.

பிரான்சில் கொரோனோ வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான 42 பேருக்கு ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் மற்றும் Azithromycin இணைந்த சிகிச்சை தரப்பட்டதில் அவர்களில் 38 பேர் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து வெளியே வந்தனர். 3 பேருக்கு நோய் மேலும் தீவிரமானது. ஒருவர் பலியானார். இந்த ஆய்வு முடிவுகளை கடந்த மாதம் 20ம் திகதி பிரான்ஸ் வெளியிட்டது. இதையடுத்து உலகம் முழுவதுமே இந்த மருந்துக்கு அடிதடியே நடக்க ஆரம்பித்து விட்டது. இதற்குத்தான் இந்தியாவிடமும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது வேகத்தைக் காட்டினார். மருந்தை உடனே அனுப்பாவிட்டால் இந்தியா எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று மிரட்டினார்.

இந்த மருந்து எப்படி வேலை செய்கிறது? கொரோனா வைரஸோ அல்லது மலேரியாவை ஏற்படுத்தும் பிளாஸ்மோடியமோஇ எந்த நுண்ணியிரியாக இருந்தாலும் மூக்கு, காது, கண், இரத்தம் வழியாக மனித உடலுக்குள் வந்தவுடன் செய்யும் முதல் வேலை கலங்களுக்குள் நுழைவதுதான். கலங்களில் ஒரு வைரஸ் நுழைய வேண்டுமானால், முதலில் அந்த கலங்களின் மேலே உள்ள ரிசப்டர்களில் வைரஸ் ஒட்டிக் கொள்ள வேண்டும். கலங்களில் மேலே இருக்கும் யூஊநு2 சநஉநிவழச எனப்படும் அண்டெனா மாதிரியான ஒரு அமைப்பில்தான் முதலில் இந்த கொரோனாவைரஸ் ஒட்டிக் கொள்கிறது. பின்னர் இந்த வைரஸ் சுரக்கும் திரவம் இந்த அண்டெனாவை உருக்குலைய வைத்து கலச் சுவர்களை துளைத்துக் கொண்டு உள்ளே செல்கிறது. உள்ளே போனவுடன் பல மடங்காக பல்கிப் பெருகுகிறது இந்த வைரஸ்.

இந்த  ACE2 receptor  உடலின் இரத்த அழுத்தத்தை பராமரிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் முக்கிமானது. இப்படி உடலின் கோடிக்கணக்கான கலங்களுக்குள் நுழையும் கொரோனா வைரஸ், அதே வேளையில் கலங்களில் இருந்து பிற கலங்களுக்கும் மிக வேகமாய் பரவுகிறது.   

பிளாஸ்மோடியமோ அல்லது கொரோனா வைரஸோ அவை சுரக்கும் இரசாயனம் என்டோசோம்களின் சுவர்களை கரைய வைத்து உள்ளே நுழைகின்றன. இந்த என்டோசோம்கள் அடிப்படையில் கொஞ்சம் அமிலத்தன்மை கொண்டவை. இந்த சுவர்களில் துளை போட பிளாஸ்மோடியம் போன்ற நுண்ணியிரிகள் சுரக்கும் இரசாயனமும் அமிலம்தான் உதவுகின்றன.

இந்த மருந்து என்டோசோம்களின் காரத்தன்மையை அதிகரிக்கிறது. இதனால் பிளாஸ்மோடியம் நுண்ணியிரி அமிலத்தை சுரந்து சுரந்து என்டோசோம்களின் சுவர்களை துளை போட ஒரு பக்கம் தொடர்ந்து முயற்சிக்க, ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் அதே என்டோசோம்களின் சுவர்களில் காரத்தன்மையை சேர்த்துக் கொண்டே செல்ல, எவ்வளவுதான் அமிலத்தை பிளாஸ்மோடியம் சுரந்தாலும் என்டோசோம்களின் சுவர்களில் துளை விழுவது சாத்தியமில்லாமல் போகிறது. மேலும் கலங்களின் காரத்தன்மை ஒரு அளவுக்கு மேல் அதிகரிக்கும் போது பிளாஸ்மோடியத்துக்கு அதுவே விஷமாகி விடுகிறது. அந்த நுண்ணியிரி உயிரிழக்க நேரிடுகிறது.

கொரோனா வைரசும் கிட்டத்தட்ட பிளாஸ்மோடியம் செய்யும்  வேலையைத்தான் செய்கிறது. கலங்களில் நுழைய அதுவும் என்டோசோம்களுடன் போராடுகிறது. இதனால்தான் என்டோசோம்களின் சுவர்களை ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்தி காரத்தன்மையை அதிகரித்து கொரோனா வைரசையும் அழிக்க முடியும் என்று மருத்துவ உலகம் நம்புகிறது.

ஆனால், பிளாஸ்மோடியமும் வைரசும் ஒன்றல்ல என்பது ஒரு பிரிவு ஆராய்ச்சியாளர்களின் எதிர் கருத்தாக உள்ளது.

இருந்தாலும் பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியில் கொரோனா வைரசுக்கு எதிராக ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் மருந்து சிறப்பாகவே செயல்பட்டதாக வெளிவரும் தகவலாலும் வேறு மருந்துகள் ஏதும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லாததாலும்இ இந்த மருந்துக்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது.

இதற்கிடையே மூட்டுகளைத் தாக்கும் ஆர்த்ரிடிஸ் நோய்க்கு எதிரான மருந்துகளும் கூட கொரேனோவைரசால் தாக்கப்பட்டவர்களின் நுரையீரல்களை பாதுகாக்க உதவுவதாக சில ஆய்வுகள் வெளியாகியுள்ளன. கொரோனோவைரசின் சில வேலைகளால் உடலின் நோய் எதிர்ப்பு கலங்கள், வைரசுக்கு பதிலாக நுரையீரலின் ஆரோக்கியமான கலங்களை தாக்குவதை இந்த மருந்துகள் தடுப்பதால், நுரையீரல் மேலும் மோசமாவதை தடுக்க முடியும் என்கின்றன ஆய்வுகள்.

அதே போல அமெரிக்காவின் ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவ ஆராச்சியாளர்கள் இன்னொரு மருந்தையும் சொல்கிறார்கள்.

அது  கொரோனாவைரசால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் நுண்ணியிரி எதிர்ப்பு. இதையே கொரோனாவைரசுக்கு எதிராக மருந்தாக திருப்பி விடலாம் என்கிறார்கள். கிட்டத்தட்ட தடுப்பூசி மாதிரி. மனிதனை வெல்ல கொரோனாவும், கொரோனாவை வெல்ல மனிதனுமாய் போராட்டங்கள் தொடர்கின்றன.


Add new comment

Or log in with...