இடர் வலயங்களில் மாற்று வழிகளில் மருந்து கொள்வனவு
நாட்டிலுள்ள மருந்தகங்களை முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை தொடர்ந்தும் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒசுசல, பார்மசிகள் மற்றும் வங்கிச் சேவைகள் என்பனவும் தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாகவே இருக்கும் என, ஜனாதிபதி செயலணியினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அமைய இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள இடர் வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் முற்றுமுழுதாக முடக்கப்பட்டுள்ள (Lockdown) பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில், நாட்டின் அனைத்து மருந்தகங்களும் இவ்வாறு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (09) முதல் அமுல்படுத்தப்பட்ட இந்நடைமுறை தொடர்ந்தும் செயற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடர் வலயங்களில் இணையம் மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவோ அல்லது ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் வழிகள் மூலமாக வீட்டிலிருந்தவாறே மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒவ்வொரு மருந்தகமும் பின்பற்ற வேண்டிய ஒழுங்கு விதிகளை உள்ளடக்கிய அறிவிப்பொன்றை, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை வழங்கியுள்ளது.
Add new comment