மொரட்டுவ, எகொடஉயன, புதிய பாலம் அருகே வீதித் தடையில் உத்தரவை மீறிச் சென்ற கார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதான 4 பேரில் மூவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 02ஆம் திகதி இரவு 10.20 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது, காயமடையாத ஒருவர் உள்ளிட்ட மூவருக்கு நேற்றையதினம் (08) வரை பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்ததோடு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபருக்கு இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் மற்றும் பாணந்துறை வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த 02 பேர் ஆகிய மூவரும் நேற்றையதினம் (08) பாணந்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, ஏப்ரல் 17ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ள மற்றைய சந்தேகநபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிறைச்சாலை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
Add new comment