எதிர்வரும் ஏப்ரல் 10 முதல் 15 வரை முழு இலங்கை முற்றிலுமாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு பகிரப்படும் செய்தி தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
ஏப்ரல் 10 - 15 வரை, சட்டம் கடுமையாக பின்பற்றப்படும் எனவும், உணவு வழங்குதல், விநியோகம், ஒன்லைன் மூலமான உணவு விநியோகம், பேக்கரி தயாரிப்புகள் போன்ற அனைத்தும் இயங்காது எனவும், எந்தவொரு விற்பனை நிலையமும் திறக்க அனுமதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டு, செய்தியொன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான தகவல்களில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும், அரசாங்கம் அத்தகைய முடிவை எடுக்கவில்லை என்றும் பொதுமக்களுக்குத் தெரிவிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
அத்துடன், இதுபோன்ற தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பகிரக் கூடாது என்று இலங்கை பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தவறான தகவலை வெளியிட்டு மற்றும் பரப்பி வருகின்வர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
Add new comment