அலட்சியம் ஆபத்தையே தரும்!

கொரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் மக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள்

இன்று உலகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது கண்ணுக்குப் புலப்படாத வைரஸான கொரோனா என்னும் கொவிட் 19!  

அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே கதிகலங்கி நிற்கும் நிலையில் உள்ளன. இலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை அமுல் செய்து எமது நாட்டு மக்களை அரசு வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசு பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் பொதுமக்களில் பலர் இந்த விடயங்களில் அசிரத்தை காட்டுவதை அவதானிக்க முடிகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு  நடைமுறைச் சாத்தியமான  விடயங்களாக கைகழுவுதல் ,சமூக தொடுகைகளில்   இடைவெளி பேணல், முகக்கவசம் அணிதல்,பொது இடங்களில் எமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்தல், முதியோர்களுக்கான தேவைகளை இளையவர்கள் நிறைவேற்றல், தனிமையாக வீட்டிலிருத்தல்  போன்றவற்றை நாம் குறிப்பிடலாம். 

இவ்வாறான அறிவுறுத்தல்கள் இருந்தும் இன்று எமது மக்களில் பலர் அது குறித்து அலட்சியமாக இருப்பதைக் காண முடிகின்றது.   நாட்டின் பொலிஸ், இராணுவம் மற்றும் சுகாதாரத் துறை சேர்ந்தவர்களின் பங்களிப்புதான் இது என்ற மனோநிலை பலரிடம் காணப்படுகின்றது.

அது மாத்திரமல்லாது எங்களுடைய பிரச்சினைகள் சகலவற்றையும் அரசாங்கம் தீர்த்துத் தர வேண்டும் என்ற மனநிலைக்கு பலர் பழக்கப்பட்டுள்ளனர்.

'கொரோனா  பிரச்சினை கொழும்பிலும்,கம்பஹாவிலும்,புத்தளம் மாவட்டங்களில்தான் உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இல்லை' என்ற மனோநிலை இம்மாவட்டத்தில் உள்ள பலரிடம்  காணப்படுகின்றது. அத்துடன் முகக் கவசம் அணிந்தால் போதுமானது அல்லது 'கை கழுவினால் கொரோனா வராது  அல்லது சமூக இடைவெளியை பேணுவதால் மட்டும் எமக்கு கொரோனா வராது' என்ற மனோநிலை மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

கொரோனா தொற்றிலிருந்து விடுபட பல்வேறு செயற்பாடுகளை  கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் கூறியும் மக்கள் ஒன்றை கைவிட்டு ஒன்றை மாத்திரம் கைக்கொள்ளும் நிலைமை காணப்படுகின்றது. அரச திணைக்களங்களும் மற்றும் ஏனைய அமைப்புகளும் பல்வேறு செயற்றிட்டங்களினூடாக கொரோனா கட்டுப்படுத்தலில் ஈடுபடுகின்ற போதிலும் மக்கள் அசிரத்தையாக உள்ளதே கவலை தருகின்றது.

இந்த வைரஸ் சாதாரண தடிமன், காய்ச்சல் போன்றது என்று கிராம மக்கள் நினைக்கின்றனர். ஆயுர்வேத மருந்து அவித்து குடித்தால் போதும் என்றும் பலர் நினைக்கின்றனர். அயல் வீடுகளில் உள்ளோர் பலர் ஒன்றுகூடி இந்தநோயுடைய பாரதூரம் விளங்காமல் கதைத்து திரிகிறார்கள்.

இது எங்களுக்கான சவால் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இதற்காக சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும். கிராமப்புறங்களில்  இளைஞர்கள் நாட்டின் சட்டத்தை மதிக்காமல்  ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது நடமாடித் திரிவதை மட்டக்களப்பு மாவட்டத்தில் காண முடிகின்றது .இதன் போது பொலிசாருக்கு சங்கடம் ஏற்படுகின்றது.

எனவே குறிப்பாக இளைஞர்களுக்கு நாட்டின் சட்ட திட்டங்கள் பற்றிய அறிவுரை வழங்கப்பட வேண்டும்.  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தமது சேவைகளை மீண்டும் ஆரம்பித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் மட்டகளப்பு மாவட்த்தில் உள்ள தன்னார்வ அமைப்புகள் மற்றும் அரச திணைக்களங்கள், இளைஞர் அமைப்புகள், மத நிறுவனங்கள் இவ்விடயத்தில் நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.

ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும்  பல்தரப்பு அரங்கத்தை இணையத்தினூடாக ஏற்படுத்தலாம். இப்பல்தரப்பு அரங்கத்தின் கூட்டங்களை இணையத்தளத்தினூடாக நடத்தலாம். கருத்துகளை பதிவு செய்யலாம். இப்பல்தரப்பு அரங்கத்தினூடாக பெறப்படும் ஆலோசனைகளை  ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக வெளிப்படையாக தெரியப்படுத்துவதினூடாக விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

அப்போதுதான் கெரோனாவின் கோரப்பிடியில் இருந்து நாங்கள் விடுபடலாம்.

அ.ச.மு. சதீக், (ஓட்டமாவடி  தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...