Monday, March 30, 2020 - 6:39pm
அத்தியாவசியச் சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் விசேட கூட்டமொன்று அலரி மாளிகையில் இன்று (30) இடம்பெற்றது.
நாட்டில் அத்தியாவசியச் சேவைகளை வழங்குவதற்காகத் தற்போது எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் இதன்போது முழுமையாக மீளாய்வு செய்யப்பட்டதோடு, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக, அத்தியாவசியச் சேவைகளுக்கான விசேட ஜனாதிபதிச் செயலணியின், ஊடக ஒருங்கிணைப்புக்கான தலைவர், பேராசிரியர் சரித்த ஹேரத் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பின்வரும் விடயங்கள் குறித்துக் கவனஞ்செலுத்தப்பட்டுள்ளது:
- கையில் பணமிருந்தும் உணவு உட்பட அத்தியாவசியச் சேவைகள் இன்னும் கிடைக்கப்பெறாதவர்களுக்கு அவற்றை வழங்கும் தற்போதுள்ள நடைமுறையின் மீளாய்வு.
- மருந்துகளை விநியோகித்தல் தொடர்பில் அஞ்சல் திணைக்களத்தோடு இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம் குறித்த கவனம்.
- கையில் பணமில்லாத, ஆனால் வங்கிக் கணக்குகளில் பணத்தைக் கொண்டிருப்போர் அவற்றை மீளப்பெற்றுக்கொள்வதை வழிவகுப்பதற்கான உத்திகள்.
- சமுர்த்திப் பயனாளிகளுக்கான 5,000 ரூபாய் கொடுப்பனவை மார்ச் 31 இற்கு முன்னர் பூர்த்தி செய்தல்.
- கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் காரணமாகத் தொழில்களை இழந்து, அரசாங்கத்தின் உதவிப் பட்டியலில் சேர்க்கப்படாதோருக்கான நிவாரண வழிமுறைகள்.
- உணவுப் பொருட்களின் உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதன் அவசியமும் அரிசி, மரக்கறிகள், மீன், கோழியிறைச்சி ஆகியனவற்றில் அடுத்த பருவத்தில் தன்னிறைவை அடைதலும்.
- விலங்கு உணவுகளின் விநியோகத்தையும் போக்குவாத்தையும் முன்னேற்றுவதன் மூலமாக இலங்கையின் கால்நடைத் தொழிற்றுறையைப் பேணுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்.
Add new comment