ஸ்பெயினில் கொரோனாவினால் உயிரிழந்தோர் 5,000 ஐ தாண்டியது

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 5,000 ஐ தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 832  உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், இந்நோய்த் தொற்றுக் காரணமாக 5,690 உயிரிழப்புகள் சம்பவித்துள்ளதோடு, 72,248 பேர் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

உயிரிழப்புகளை பொறுத்தவரையில் இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெயின் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

எதிர்வரும் ஏப்ரல் 12ஆம் திகதி வரை அந்நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு, அங்கு கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அத்தோடு பொதுமக்களின் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை அந்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும், இந்நோய்த் தொற்றிலிருந்து 2,928 பேர் குணமடைந்து இது 12,285ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 31 சதவீத அதிகரிப்பு எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 


Add new comment

Or log in with...