மக்களின் இயல்பு வாழ்க்கை; நெறிப்படுத்தல் அதிகாரம் ஜனாதிபதி செயலணிக்கு

ஜனாதிபதிக்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் கொரோனா வைரஸ் தொற்றை இலங்கையிலிருந்து ஒழிப்பதில் அனைத்து மக்களினதும் இயல்பு வாழ்க்கையை சுமுகமாக பேணுவதற்கான நெறிப்படுத்தல் அதிகாரம் தற்போது தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவுவிடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி பசில் ராஜபக்ஷ செயலணியின் தலைவராகவும் பிரதமரின் மேலதிக செயலாளர் என்டன் பெரேரா செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாகாண ஆளுநர்கள், பல்வேறு அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படை தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை தலைவர்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அதிகார சபைகளின் தலைவர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட 40 பேர் இச்செயலணியின் உறுப்பினர்களாவர்.

ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் செயலணிக்கான அதிகாரங்கள் மற்றும் பணிகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக இடர் நிலைமை உள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஏனைய மாவட்டங்களுக்கும் செயலணி கவனம் செலுத்த வேண்டும்.

நெல், தானியங்கள், மரக்கறி, மீன், பால், முட்டை உற்பத்திகள் மற்றும் தேயிலை, கறுவா, மிளகு போன்ற பெருந்தோட்ட உற்பத்திகளுக்காக விவசாயிகளுக்கு வசதிகளை வழங்குவது ஏனைய பணிகளுக்கு மத்தியில் முதன்மையானவையாகும். அத்தியாவசிய உலர் உணவு, மருந்து இறக்குமதி தேயிலை, துப்பரவு ஆடைகள் போன்றவற்றின் ஏற்றுமதியை இலகுபடுத்துவதற்காக இலங்கை துறைமுகம், சுங்கம், நிறுவன வங்கிகள் மற்றும் ஏனைய உரிய அரசாங்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பை மேற்கொள்வதும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தலும் வேறு பணிகளாகும்.

கிராமிய மட்டங்களில் உற்பத்தியாளர்களினால் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு பெற்றுக்கொடுத்தல், நெறிப்படுத்தல் அறிக்கையினை ஜனாதிபதிக்கு முன்வைத்தல் ஆகியனவும் செயலணியின் பணிகளாகும்.

சேவைகளை வழங்குவதற்காக உதவிகள் கோரப்படும் அனைத்து அரச அதிகாரிகளும் அத்தகைய ஏனையவர்களும் அப்பணிகள் சம்பந்தமான அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப செயற்பட வேண்டும். அனைத்து உதவிகள் மற்றும் தகவல்களை வழங்க வேண்டும் என்றும் அரசாங்க அதிகாரிகளுக்கும் ஏனையவர்களுக்கும் சுற்றுநிருபங்களின் மூலம் ஜனாதிபதியினால் பணிக்கப்பட்டுள்ளது. அதிகாரி ஒருவரினால் வழங்கப்படும் கடமை அல்லது பொறுப்பை நிறைவேற்றுவதை தாமதப்படுத்துவது அல்லது நிறைவேற்றத் தவறுதல் குறித்து ஜனாதிபதிக்கு அறிக்கையிடுமாறும் செயலணிக்கு பணிக்கப்பட்டுள்ளது.

செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள மேலும் சில பணிகள் வருமாறு,

விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான விதைகள், கன்றுகள், உரம் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்காக விவசாய திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம் போன்ற நிறுவனங்களை நெறிப்படுத்தலும் தேவையான வசதிகளை வழங்குதலும்

சேதனப் பசளை பாவனை மற்றும் வீட்டுத் தோட்ட உற்பத்தியை வலுவூட்டுதல், இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் சமுர்த்தி வங்கிக் கிளை மூலம் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்குதல் குறித்த பணிகளை நிறைவேற்றும் போது பெண்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் இடர் நிலைக்குள்ளானவர்கள் விடயத்தில் விசேட கவனம் செலுத்துதல்

விவசாயிகள் மற்றும் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தும் வகையில் அரிசி, மரக்கறி மற்றும் உற்பத்திகளை அனைத்து மாவட்டங்களிலும் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதை ஊக்கப்படுத்த வேண்டும். கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், பொருளாதார மத்திய நிலையங்கள், காகில்ஸ், கீல்ஸ், ஆபிகோ, லாப் விற்பனை வலையமைப்பை ஒழுங்குசெய்தல், விவசாய மற்றும் பெருந்தோட்ட உற்பத்தி நடவடிக்கைகளுக்காக விவசாயிகளுக்கு வசதிகளை வழங்குதல், மருந்துப் பொருட்களை விநியோகித்தல், வர்த்தக வங்கிகளை திறந்து பேணுதல் உள்ளிட்ட நாளாந்த மக்களின் இயல்பு வாழ்க்கையை சுமுகமாக பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக பேணும் அதிகாரம் செயலணிக்குரியதாகும்.


Add new comment

Or log in with...