கல்விச் சுற்றுலாக்களுக்கு மறுஅறிவித்தல் வரை தடை

கல்விச் சுற்றுலாக்களுக்கு மறுஅறிவித்தல் வரை தடை-Educational Tour Suspended Until Further Notice-Ministry of Education

பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதா? இன்று முடிவு

பாடசாலைகளின் அனைத்து கல்விச் சுற்றுலா மற்றும் களப் பயணங்களுக்கும் மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஏற்படக்கூடிய ஆபத்தான நிலைமைகளை கருத்திற் கொண்டு, பாதிப்புறக்கூடிய மட்டத்திலுள்ள சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வைரஸினால் பாதிக்கப்பட்ட நபர் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், பாடசாலைகளின் கல்விச் சுற்றுலாக்களையும் களப் பயணங்களையும் இடைநிறுத்துமாறு கல்வி அமைச்சு, அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சிறுவர்கள் மிக உணர்திறன் கொண்டவர்களாக காணப்படுவதால், இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், சுகாதார பாதுகாப்பு தொடர்பில், சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் அறிவுரைகளை உரிய முறையில் பின்பற்றுமாறு சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் கோரிக்கை விடுப்பதாக, கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் தொடர்பில் பரவி வரும் வதந்திகள் மற்றும் தவறான தகவல்கள் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தாமலிருக்குமாறு, அனைத்து பாடசாலை சமூகத்திடமும் கல்வி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை, பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதா என்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சர் டளஸ் அளகப்பெரும தெரிவித்ததோடு, இன்று (12) பிற்பகல் அது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...