கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளியின் மகனும் அந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் உண்மைக்குப் புறம்பானது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிலைமையை ஆராய்வதற்காக தொற்றுநோயியல் நிபுணர்கள் இருவர், அப்பிள்ளை கல்வி கற்கும் கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கு இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டு நிலைமையை ஆராய்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த பிள்ளைக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக் குறைவாக காணப்படுவதாகவும், இதன் காரணமாக அப்பிள்ளையிடமிருந்து ஏனைய பிள்ளைகளுக்கு நோய்த்தொற்று பரவுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு எனவும் தெரிவித்தார்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் தற்போது அங்கொடை தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, அவரது குடும்பத்தினர் எவருக்கும் கொரோனா தொற்றுக்கான எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை எனவும் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு அவதானிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Add new comment