தற்போது நாட்டில் வரட்சியான காலநிலை நிலவி வருவதன் காரணமாக மின் விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்காக தனியார் துறையிடமிருந்து 128 மெகாவோட் மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இவ்விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் மஹிந்த அமரவீர முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்திருந்ததோடு, அது தொடர்பாக நேற்றுமுன்தினம் மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.
தற்போது நிலவி வரும் காலநிலை காரணமாக மின்வலு இன்னும் குறைவடையும் பட்சத்தில் பரிமாற்றத் தொகுதியை நடத்தி செல்வதற்கான மின்சாரத்தை துண்டிக்க வேண்டி ஏற்பட்ட போதிலும், அவ்வாறு செய்யாதிருக்க மேலதிக மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டும் என்று மின்சார சபை அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த அமைச்சரவை யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மிக வேகமாக குறைவடைந்து வருவதால், மின்சாரத்திற்காக வழங்கப்படும் நீரின் அளவு, நீர் முகாமைத்துவ செயலாளர் அலுவலகத்தினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
Add new comment