அதிபர், ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு; நாளை சுகவீன லீவு?

அதிபர், ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு; நாளை சுகவீன லீவு?-Principal Teachers Sick Leave Protest

அதிபர் மற்றும் ஆசிரியகர்கள் நாளை (26) நாடளாவிய ரீதியில் சுகவீன லீவுப் போட்டத்திலும் கல்வி அமைச்சுக்கு முன்னால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உரிமைப் போராட்டத்திலும் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் சுற்றறிக்கையினை வெளியிடுவதற்கான அழுத்தத்தை வழங்கும் உரிமைக்கான போராட்டத்தில் அனைவரையும் கைகோர்க்குமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர்  தலைவர் ஜெஸ்மி எம். மூஸா கேட்டுள்ளார்.

கல்முனையில் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று (24) மாலை 5.30 மணியளவில்  அதன் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு  கூறினார்.

மேலும் இச்சந்திப்பில் தெரிவித்ததாவது,

நாளை (26) நாடளாவிய ரீதியில் சுகவீன லீவுப் போட்டத்திலும் கல்வி அமைச்சுக்கு முன்னால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உரிமைப் போராட்டத்திலும் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாட்டினை முடிவுக்குக் கொண்டுவரும் விதத்தில் கூட்டிணைந்த தொழிற்சங்கங்கள் இப்போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளன.

கடந்த காலங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இடப்பெற்ற பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் எட்டப்படவில்லை. கோட்டைப் புகையிரத நிலையத்திற்கு முன்னால் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கான சாதகமான சமிக்ஞையும் இது வரை காட்டப்படவில்லை.

ஆசிரியர் சமூகம் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதனை நாம் அங்கீகரிக்க முடியாது. இதனை சகல தரப்பினருக்கும் கற்றுக் கொடுக்கும் சந்தர்ப்பமாக இப்போராட்டம் அமைய அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

அதிபர், ஆசிரியர் சேவையானது தனியான ஒன்றிணைந்த சேவைப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான கோரிக்கையினையும் இப்போராட்டத்தின் மூலம் முன்வைத்துள்ளோம்

கடந்த வருடத்தில் செய்யப்பட்ட நாடு தழுவிய போராட்டங்கள் எமக்கு வெற்றியைத் தந்துள்ளன. அவ்வாறான இணைவினை இப்போராட்டங்களிலும் செயற்படுத்துவதனூடாகவே நமது இலக்குகளை அடைய முடியும்.

இப்போராட்டம் இலங்கையில் உள்ள ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் உரியதாகும். தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் மாத்திரம் நாம் எம் இலக்குகளை இதனை அடைந்து கொள்ள முடியாது

கூட்டிணைந்த சங்கங்களின் இப்போராட்டத்தில் இஸ்லாமிய ஆசிரியர் சங்கமும் இணைந்துள்ளது. இப்போராட்டங்களை முன்னெடுக்க அனைவரும் கைகோர்க்க வேண்டுமெனவும் அதற்கான முழு ஆதரவையும் சங்கம் வழங்கவுள்ளதாகவும்  அவர் மேலும் குறிப்பிட்டார்.

(பாறுக் ஷிஹான்)


Add new comment

Or log in with...