உச்ச நீதிமன்றம் அதிருப்தி
தலைநகர் புது டில்லியில் வன்முறை இந்த அளவுக்குப் பரவியதற்கு காவல்துறையின் மெத்தனப் போக்கே காரணம் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
புது டில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த வன்முறைச் சம்பவத்தில் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளதோடு, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதன்போது, முஸ்லிம்களின் உடைமைகள், பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கு ஒரு சில இராணுவ வீரர்களும் துணையாக இருந்துள்ளதாகவும் அல் ஜஸீரா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு சில பகுதிகளில், முஸ்லிம்கள் தங்களது குடியிருப்புகளிலிருந்து வெளியேறி தங்களது உடைமைகளுடன் வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
A saffron flag was raised over a mosque in India’s capital after it was set on fire.#DelhiViolence death toll rises to 21, as police are accused of looking the other way while Muslims are targeted. pic.twitter.com/0R6ciBvI18
— Al Jazeera English (@AJEnglish) February 26, 2020
கடும்போக்கு, பிஜேபி ஆதரவாளர்களால் திட்டமிட்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் புது டில்லியில் திட்டமிட்டே வன்முறைச் சம்பவங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தி புது டில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது இதனைத் தெரிவித்தார்.
டில்லி வன்முறை தொடர்பாக உளவுத் துறைக்கு முன்கூட்டியே தகவல் கிடைக்கவில்லையா? டில்லியில் நடைபெற்று வரும் வன்முறைக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்.
துணை இராணுவப் படையினரை முன்கூட்டியே அழைக்காதது ஏன் என்றும் சோனியா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், டில்லியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பாஜக தலைவர்கள் பேசி வருகிறார்கள். டில்லியில் வன்முறையைத் தவிர்க்கும் பணியில் முதல்வர் கெஜ்ரிவாலும் தோல்வியடைந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தலைநகர் புது டில்லியில் வன்முறை இந்த அளவுக்குப் பரவியதற்கு காவல்துறையின் மெத்தனப் போக்கே காரணம் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
நிலைமை கைமீறி செல்லும் அளவுக்கு ஏன் விட்டுவிட்டீர்கள் என்று மத்திய அரசையும் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.
டில்லி வன்முறைச் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தியாவின் தலைநகரான புது டில்லியில் இதுபோன்ற வன்முறை நடப்பது மிகவும் துரதிஷ்டவசமானது என்றும், காவல்துறையினர் சரியாக செயல்பட்டிருந்தால் நிச்சயம் இதுபோன்ற மிக மோசமான வன்முறையைத் தவிர்த்திருக்கலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துக் கூறியுள்ளனர்.
டில்லியில் நிலைமை மிக மோசமாக இருப்பதாகவும், காவலர் ஒருவர் மிக மோசமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டதைக் கேட்ட நீதிபதிகள், அதையேதான் நாங்களும் கேட்கிறோம், டில்லியில் நிலைமை இந்த அளவுக்கு கைமீறிச் செல்லக் காரணம் என்ன? உங்களிடம் தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளன. காவல்துறை உள்ளது. அனைத்து வசதிகளும் உள்ளன. காவல்துறையினர் மிகச் சரியாக திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் இந்த நிலைமையைத் தவிர்த்திருக்கலாமே? உத்தரவுகள் முறையாகப் பிறப்பிக்கப்பட்டு, அது காவல்துறையைச் சென்றடைந்ததா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், காவல்துறையின் மெத்தனப்போக்கே இந்த வன்முறைக்குக் காரணம் என்றும் கூறியுள்ளனர்.
மேலும், டில்லி வன்முறைச் சம்பவம் குறித்த மனுவை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் முறையிடுமாறு அறிவுறுத்தியது.
Add new comment