தடைப்படுகிறதா இதயத் துடிப்பு?

இரண்டு நாட்களாகச் சிறிது மயக்கமாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்த நபரொருவர் வீட்டில் வழமைபோன்று நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரது வீட்டார் அவரை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அவரது நாடித்துடிப்பு குறைவாக இருந்ததால், ஈ.சி.ஜி எடுத்துப் பார்த்தனர். அப்போது அவரது இதயத் துடிப்பு குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  

அதாவது, அவரது இதயத்தின் வலது மேல் அறையிலிருந்து கீழ் அறைகளுக்கு வருகின்ற இலத்திரன் ஒட்டப் பாதையில் முழுமையாகத் தடை ஏற்பட்டதால் அவர் மயங்கிக் கீழே விழுந்துள்ளார் என்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்துள்ளனர். இந்த உபாதை தான் ‘இதயத் துடிப்பு முடக்கம்’ (Complete heart block) என அழைக்கப்படுகின்றது. 

‘இதயத் துடிப்பு முடக்கம்’ ஏற்படும் விதம் 

பொதுவாக ஓர் இயந்திரம் இயங்க வேண்டுமானால், அதற்கு மின்சக்தி தேவைப்படுவதைப் போன்று இதயம் துடிப்பதற்கும் சிறிதளவு மின்னோட்டம் தேவைப்படும். இதயத்தின் வலது மேலறையின் மேற்பகுதியில், ஒரு சிறிய ஜெனரேட்டர் போன்று ‘எஸ்-ஏ நோடு’ (Sino Atrial Node – SA node) என்னும் மின்கணு உள்ளது. இதுதான் மின்சாரத்தை உற்பத்தி செய்து இதயத்தைத் துடிக்கச் செய்கிறது. இது வலது மேலறையின் கீழ்ப்பகுதியில் உள்ள ‘ஏ.வி. நோடு’ (Atrio Ventricular Node – AV Node) என்னும் துணை மின்கணுவுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

இதனுடன் சிறப்பு நார்க்கற்றைகள்’ (Bundle of His-Purkinje Fibres) இணைந்துள்ளன. இவை கீழ்நோக்கி வலது, இடது கிளைகளாகப் பிரிந்து, இதயத்தசைகளின் கீழறைகளுடன் சீராகப் பிணைந்துள்ளன. வலது மேலறையின் மின்கணுவுடன் பாட்ச்மேன் நார்க்கற்றைகள் (Bachmann’s bundle) இணைந்து, இடது இதயத்தின் மேலறை முழுவதும் பிணைந்துள்ளன. இப்படி ஒரு சங்கிலிப் பின்னலாக இதயம் முழுவதும் நார்க்கற்றைகள் அமைந்து ஒரு மின்னோட்டப் பாதையை அமைத்துக் கொடுத்துள்ளதால், வலது இதயக் கணுவில் உற்பத்தியாகும் மின்னோட்டமானது எல்லா இதயத் தசைகளுக்கும் வழங்கப்படுகிறது. 

இதன் பலனாக இதயம் தூண்டப்பட்டு சீரான எண்ணிக்கையிலும், லப், டப், லப், டப் என்னும் இயல்பான லயத்துடனும் துடிக்கிறது. இந்த மின்னோட்டப் பாதையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டாலோ இதய மின்கணுவில் போதுமான அளவுக்கு மின்னோட்டம் உற்பத்தி ஆகாவிட்டாலோ, கீழ் அறைகளுக்கு மின்னோட்டம் செல்வது முழுவதுமாகத் தடைப்படும். அப்போது இதயத் துடிப்பு குறைவடையும் அல்லது நின்றுவிடும். இவ்வாறு இதயத் துடிப்பு நின்றுவிடும் நிலைமையே ‘இதயத் துடிப்பு முடக்கம்’ எனப்படுகின்றது. 

இதயத் துடிப்பு குறைகிறதா? 

உடல் முழுவதும் குருதியைச் செலுத்தவென இதயம் நிமிடத்துக்கு 60முதல் 100தடவைகள் வரை துடிக்கிறது. ஒவ்வொரு துடிப்பின்போதும் 70மி.லி. குருதியை அது உடலுக்குள் செலுத்தும். நிமிடத்துக்கு 60தடவைக்கும் குறைவாக இதயம் துடிப்பது ‘குறைத் துடிப்பு’ (Bradycardia) எனப்படுகின்றது. மாரடைப்பு, இதயத் துடிப்பு முடக்கம் (Heart block), குறை தரொய்ட்போன்ற பிரச்சினைகளால் இதயத் தசைகளில் தொற்று (Myocarditis) ஏற்படுதல், இதயத் தசைகள் தொய்வு (Cardio myopathy) அடைதல், நாரிழையழற்சி (Fibrosis) ஏற்படுதல், சிறுவயதில் கீல்வாதக் காய்ச்சல் (Rheumatic fever) வந்து பின்னாளில் இதய வால்வுகளைப் பழுதாக்கிவிடுதல் போன்றவற்றாலும் இப்பிரச்சினை உருவாகலாம். அத்தோடு சில மருந்துகளின் பக்கவிளைவு, முதுமை, குருதியில் சில தாதுக்கள் குறைதல் அல்லது அதிகரித்தல், வெளிக்காற்றில் ஒட்சிசன் அதிகம் குறைதல் (Hypoxia) போன்ற காரணங்களாலும் இதயத் துடிப்பு குறைடைய முடியும். 

அறிகுறிகள்  

இப் பிரச்சினைக்கு மூன்று நிலைகள் உள்ளன. முதலாம் நிலை ஆபத்து இல்லாதது. அப்போது கடுமையான சோர்வு தலைகாட்டும். உடல் பலவீனமாக இருக்கும். கிறுகிறுப்பு ஏற்படும். இவ்வாறான அறிகுறிகள் காணப்படும்போது மருந்து பாவித்தால் அவ்வறிகுறிகள் சீராகிவிடும்.  அடுத்த கட்டத்தில் சிறிய அளவில் அவ்வப்போது மயக்கம் வரும். மனக்குழப்பமும் ஏற்படலாம். தற்காலிகமாக சுயநினைவை இழக்கலாம். இந்த இரண்டாம் நிலைக்குப் பெரும்பாலும் மருந்து சிகிச்சை பலன் அளிக்கும். இல்லாவிட்டால், ‘பேஸ்மேக்கர்’ (Pacemaker) கருவியைப் பொருத்த வேண்டி இருக்கும். 

மூன்றாம் நிலைதான் ஆபத்தானது. இந்நிலைமையில் இதயம் துடிப்பதைத் திடீரென்று முழுமையாக நிறுத்திவிடும். அப்போது ஆழ்ந்த மயக்கம் வரும். சுயநினைவே இருக்காது. மூச்சுத்திணறல் ஏற்படும். சிலருக்கு இதயத்தின் சில பகுதிகள் தற்காப்புக்காகத் துடிக்கும். அப்போது அவருக்கு மயக்கம் தெளிந்தாலும் அடிப்படைப் பிரச்சினை சரியாகாது. மருத்துவ உதவி அவசரமாகத் தேவைப்படும். பலருக்கு உடனே ‘செயற்கைச் சுவாசம்’ கொடுத்தால்தான் இதயத் துடிப்பு மீளும். அப்போதுகூட இதயம் நிமிடத்துக்கு 30-க்கும் குறைவாகவோ அதிவேகமாகவோ துடிக்கும். இந்த இரண்டு நிலைமைகளும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.  அதைத் தவிர்க்க பயனாளியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். எப்படி மாரடைப்பு வந்தவருக்கு முதல் ஒரு மணி நேரம் பொன்னானது, அதுபோன்று இதயத் துடிப்பு முடக்கம் ஏற்பட்டவருக்கும் அந்த நேரம் பொன்னானது. அந்த நேரத்துக்குள் சிகிச்சை கிடைத்துவிட்டால் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு. 

சிலர் நினைப்பது போன்று மாரடைப்பும் இதயத் துடிப்பு முடக்கமும் ஒன்றல்ல. இதயத் தசைகளுக்கு குருதியை எடுத்துச் செல்லும் தமனி இரத்தக் குழாய்கள் அடைத்துக்கொள்ளப்படுவதால் தான் மாரடைப்பு ஏற்படும். இதயத் தசைகளுக்கு மின்னோட்டம் தடைப்படுவதால் ஏற்படுவது தான் இதயத் துடிப்பு முடக்கம். அதேநேரம் மாரடைப்பு வந்தவருக்கு இதயத் துடிப்பு முடக்கமும் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் உள்ளது. 

சிகிச்சை  

இந்தப் பாதிப்புக்கு உள்ளாகின்றவர்களுக்கு மருந்து சிகிச்சையுடன், தற்காலிகமாக ஒரு பேஸ்மேக்கர் கருவியை உடனே பொருத்தி அவரது இதயத் துடிப்பு முறைப்படுத்துகின்றது. பின்னர் நிரந்தரமாகவே ஒரு பேஸ்மேக்கர் கருவியைப் பொருத்தி இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகின்றன. இதன் பயனாக இயல்பு வாழ்வுக்கு திரும்பிவிடலாம். 

‘பேஸ்மேக்கர்’ என்றால் என்ன?  

இதயத் துடிப்பு குறைந்தவர்களுக்கு இதயத்தைச் செயற்கை முறையில் தூண்டி, மீண்டும் அதைச் சீராகத் துடிக்கச் செய்யும் கருவிக்கு ‘செயற்கை இதய முடுக்கியே (Artificial Pacemaker) எனப்படுகின்றது. இதயத்தில் மின்கணு செய்யும் வேலையை இது செய்கிறது. இது பார்ப்பதற்கு ஒரு தீப்பெட்டி போலிருக்கும். எடை 30கிராம். இதில் பேட்டரி, ஜெனரேட்டர், சிறிய மின் சுற்று, மின்கம்பிகள் ஆகியவை இருக்கும். 

இதனை பாதிக்கப்பட்டுள்ளவருக்கு மயக்க மருந்து கொடுத்து, சிறிய அறுவை சிகிச்சை மேற்கொண்டு, மார்பில் இடது அல்லது வலது காரை எலும்புக்கு (Clavicle) அருகில், அதிக ஆழம் இல்லாதவாறு இதைப் புதைத்து, மேற்தோலைத் தையல்போட்டு மூடிவிடுகின்றனர். இதயத்துக்குச் செல்லும் கழுத்துப் பெருஞ்சிரை (Carotid vein) குருதிக் குழாய் வழியாக இதன் மின்கம்பிகள் இதய அறைகளுக்குள் கொண்டுசெல்லப்பட்டு பொருத்தி விடப்படுகின்றன. இது ஒரு கடிகாரத்தைப் போன்று இயங்கிக்கொண்டிருக்கும். இதில் இதயம் எத்தனை தடவை துடிக்க வேண்டும் என்று நிரல் எழுதப்பட்டிருக்கும். அதற்கேற்ப மின்தூண்டல்களை உருவாக்கி இது இதயத்துக்கு அனுப்பும். அதனால் இதயம் தூண்டப்பட்டு துடிப்பு சீராகிவிடும். இதில் உள்ள மின்கலத்தின் ஆயுள்காலத்தைப் பொறுத்து குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில் இதை மாற்றிக்கொள்வது அவசியமானது.   


Add new comment

Or log in with...