போக்குவரத்து துறையில் மீண்டும் உருவாகும் புரட்சி

இற்றைக்கு சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு இலங்கையர்களாகிய நாம் உலகில் ஏனைய நாடுகளின் வீதி அபிவிருத்தி தொடர்பாக ஆச்சரியப்பட்டோம். இவற்றில் மேம்பாலங்கள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் என்பன நம்மவர்க்கு பார்த்து ரசிக்கும் அம்சங்களாகவே இருந்தன. நாம் தூரப் பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போது நமக்கும் இவ்வாறான சொகுசான பாதைகள் இலகுவில் சென்று வரக் கூடியதாக இருந்தால் எவ்வளவு சுலபமாகவும் வசதியாகவும் இருக்கும் என்று ஆசைப்பட்டுள்ளோம்.

இந்தக் கனவை நனவாக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், இலங்கையின் போக்குவரத்துத் துறையில் புதியதோர் அத்தியாயத்தைதோற்றுவிக்கும் வகையில் கொழும்பிலிருந்து கட்டுநாயக்க வரையிலான அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதன் போது நகரப் புரங்களில் வாழும் மக்கள் இத்திட்டத்திற்கு தமது காணிகளை வழங்குவதற்கு ஆரம்பத்தில் தயக்கமும் எதிர்ப்பும் வெளிப்படுத்தினர். இதனால் முதலாவது அதிவேக நெடுஞ்சாலைப் பணிகள் ஆரம்பத்திலிருந்தே ஸ்தம்பிதமடைந்தன.

இருந்தாலும் அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணித்து நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்தில்  அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் உறுதியாக இருந்தது. போக்குவரத்துத் துறை வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பிக்கும் வகையில்  அரசு 2006ஆம் ஆண்டு கொட்டாவையிலிருந்து மாத்தறை வரையிலான தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளை முன்னெடுத்தது.

126கிலோ மீற்றர் கொண்ட இப்பாதையின் நிர்மாணப் பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. 20011நவம்பர் மாதம் 11ஆம் திகதி முதற் பகுதியாக கொட்டாவையிலிருந்து காலி வரையிலான பகுதி மக்கள் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டது. காலியிலிருந்து மாத்தறை வரையிலான இரண்டாவது கட்டம் 2014மார்ச் மாதம் 15ஆம் திகதி மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டது.

நாளாந்தம் இப்பாதையைப் பயன்படுத்துவோர் தொகை அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் தென் பிராந்தியத்திற்கு மாத்திரம் உரித்தான இந்த அதிவேக நெடுஞ்சாலை திட்டத்ைத நாடு பூராவும் விஸ்தரிக்குமாறு அரசாங்கத்திடம் மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதனடிப்படையில் கொழும்பிலிருந்து கட்டுநாயக்க வரை மற்றும் கொழும்பிலிருந்து கண்டி வரை அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

கொழும்பிலிருந்து மாத்தறை வரையான கரையோர பிரதான பாதையினூடாக பிரயாணம் மேற்கொண்ட ஒருவருக்கு ஐந்து மணித்தியாலங்கள் அல்லது அதற்கு கூடுதல் நேரம் சென்றது. ஆனால் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் ஒருவருக்கு ஒன்றரை மணி நேரமே எடுத்தது. இதனால் அதிகமானோர் அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவதற்கு முன்வந்ததோடு இதனால் இவர்களின் நேரம் சேமிக்கப்பட்டது. அரசாங்கத்திற்கும் வருமானம் கிடைத்தது. 

உருகுணை பிரதேச மக்கள் மாத்தறையிலிருந்து வெளியேறி கதிர்காமம் வரை பழைய பாதைகளையே பயன்படுத்தி வந்தனர். இதனால் இவர்கள் இந்த தூரத்தை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலேயே மேற்கொண்டு வந்தனர். இதனால் இந்த சிரமங்களைப் போக்கும் வண்ணம் மாத்தறை வரை நீடிக்கப்பட்ட இப்பாதை ஹம்பாந்தோட்டை வரை நீடிக்காதா என்ற ஏக்கத்தில் மக்கள் இருந்தனர்.

இவர்களின் தேவையை அறிந்த அரசாங்கம் நாட்டு மக்களின் தேவைக்கு முன்னுரிமை வழங்கி ருஹூனு மாகம் பிரதேச மக்களின் மத்தலை வரை அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் கனவை நனவாக்கியுள்ளது. மாத்தறை_மத்தலை அதிவேக நெடுஞ்சாலையின் நீர்மாணப் பணிகள் 2015ஜூலை மாதம் 04ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன. 96கிலோ மீற்றர் நீளத்தைக் கொண்ட இந்தப் பாதையின் அகலம் 24.4மீற்றர்களாகும். நான்கு 'லேன்களை' கொண்டு இப்பாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கொட்டாவையிலிருந்து மாத்தறை வரையிலான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்தின் போது காணப்பட்ட குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சூழல் பேணும் திட்டமாக நிர்மாணிக்கபட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்பு இப்பாதை நிர்மாணத்தின் போது பல்வேறு எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. இவை அனைத்திற்கும் தீர்வைப் பெற்றுக் கொடுத்து இப்பாதை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது. விசேடமாக இப்பாதை நிர்மாணத்தின் போது சுற்றாடல் பேணல் மற்றும் சுற்றூடல் பாதுகாப்பு தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்தோடு இதனூடாக நில்வள கங்கை பெருக்கெடுக்கும் வேளைகளில் தாழ்வான பிரதேசங்களைப் பாதுகாக்கும் வகையில் இப்பாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பாதையின் இருமருங்கிலுமுள்ள காடுகள், வயல் நிலங்கள், நீரூற்றுக்கள்  போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்படாமலும், இப்பாதையில் பயணிக்கும் மக்கள் இயற்கையை இரணையினை  ரசிக்கக் கூடிய வகையிலும் இப்பாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மாத்தறையிலிருந்து மத்தலை வரையிலான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்திற்கென 252.5மில்லியன் ருபா மதிப்பிடப்பட்டதோடு இதனை சீன நாட்டு எக்ஸிம் வங்கி இரண்டு வீத சலுகை வட்டி அடிப்படையில் கடனாக வழங்கியது. இது நான்கு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் மாத்தறையிலிருந்து பெலியத்தை வரை 30கிலோ மீற்றரும், பெலியத்தையிலிருந்து வெடிய வரையிலான 26கிலோ மீற்றர் இரண்டாவது கட்டமாகவும், வெடியவிலிருந்து அந்தரவௌ வரையிலான 15கிலோ மீற்றர் மூன்றாவது கட்டமாகவும், அந்தரவௌவிலிருந்து ஹம்பாந்தோட்டையினூடாக மத்தலை வரையில் நான்காவது கட்டமாகவும் நிர்மாணிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அதிவேக நெடுஞ்சாலைக்கிடையில் பரிமாற்ற நிலையமாக திகழும் அந்தரவௌ பரிமாற்ற நிலையம் இலங்கையில் எமக்கு புதியதோர் அனுபவத்தை ஏற்படுத்துகிறது. சீன தேசிய இரோ டெக்னொலொஜி சர்வதேச பொருளியல் கூட்டுத்தாபனம், சீன அரச நிர்மாணக் கம்பனி மற்றும் சீன துறைமுகக் கம்பனி ஆகிய கம்பனிகள் நிர்மாணத்தை மேற்கொண்டதோடு இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு என்பனவற்றின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

நில்வள கங்கைக்கு மேலாக பயணிக்கும் போது அதன் தாக்கத்தைக் கருத்திற் கொண்டு 10கிலோ மீற்றர் கொண்ட தூரப் பாதை பாலங்களினூடாக செல்லக் கூடிய வகையில் உறுதியாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது போன்றே வளவை கங்கைக்கு குறுக்காக பெதிகம்தொட பிரதேசத்தில் 600மீற்றர் நீளம் கொண்ட ஒரு பாலமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சிறு பாதைகளுக்குச் செல்வதற்காக அதிவேக நெடுஞ்சாலைக்கு மேலாக ஏழு பாலங்களும் கீழாக முப்பது பாலங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இத்தோடு விவசாய நிலங்களுக்கும் வயல்களுக்கும் நகரங்களுக்கிடையிலான தொடர்புகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு நிர்மாணிக்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

ஹம்பாந்தோட்டையில் யானைகள் அதிகரித்துக் காணப்படுவதனால் யானைகளுக்கும் பயணிகளுக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத விதத்தில் பஹல அந்தரவௌ பிரதேசத்தில் இரண்டு இடங்களில் யானைகள் கடப்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டு இப்பிரதேசங்களினூடாக மேம்பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு புதியதோர் பயண அனுபவம் ஏற்படும் விதத்தில் இந்த நிர்மாணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் யானைகளுக்கு எவ்வித தடைகளுமின்றி பழைய விதத்தில் நடமாட்டம் மேற்கொள்வதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. மிருகங்களின் செயற்பாடுகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமலிருக்கவும், யானைகள் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைவதைத் தடுப்பதற்காகவும் அதி சக்தி வாய்ந்த மின்சார வேலிகள் நிர்மாணிக்ககப்பட்டுள்ளன. பாதையின் இரு பகுதிகளிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை கொடகமவிலிருந்து ஹம்பாந்தோட்டையினூடாக மத்தலை வரை எட்டு பரிமாற்று நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. கொடகம, அபரெக்க, பெலியத்தை, கசாகலை, அங்குனுகொலபெலஸ்ஸ, வெடிய சூரியவௌ மற்றும் அந்தரவௌ ஆகியன இவையாகும். அத்தோடு சர்வதேச தரத்திலான சேவை நிலையமும் பெலியத்தை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சாரதிகளுக்காக ஓய்வெடுக்கும் இரண்டு ஓய்வு நிலையங்களும் இப்பாதையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இப்பாதை நிர்மாணத்தினூடாக கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்கு மூன்றரை மணித்தியாலங்களில் செல்ல முடியும். அத்தோடு கொட்டாவையிலிருந்து ஹம்பாந்தோட்டை மத்தலை வரையிலான 222கிலோ மீற்றர் தூரத்தை இரண்டரை மணித்தியாலங்களில் செல்லக் கூடியதாய் உள்ளது. மத்தலை சர்வதேச விமான நிலையப் பாதையினூடாக லுனுகம்வெஹெரைக்கு வருகை தந்து அங்கிருந்து லுனுகம்வெஹெரை நீர்த்தேக்கத்திற்கு கீழாக நான்கு 'லேன்களை' கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பாதையினூடாக கதிர்காமம் கம்உதாவ பிரதேசத்திற்கு ஒரு மணித்தியாலயத்திற்கும் குறைந்த நேரத்தில் செல்லக் கூடியதாய் உள்ளது. இதனூடாக கொழும்பிலிருந்து சொந்த வாகனத்தில் கதிர்காமம் வழிபட வருவோருக்கு பயணம் இலகுவாகியுள்ளது. மூன்றரை மணித்தியாலங்களில் கதிர்காமத்திற்கு வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபட்டு மாலையில் வீடு திரும்புவதற்கான வசதி தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு யால தேசிய சரணாலயம், பூந்தலை பறவைகள் சரணாலயம், உடவலவை யானைகள் சரணாலயம், ரன்மிஹிதென்ன லெரிசினிமா கிராமம் ஆகியவற்றுக்கும் இலகுவில் சென்று வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றோடு மத்தலை சர்வதேச விமான நிலையம், ஹம்பாந்தோட்டை ராஜபக்ஷ சர்வதேச துறைமுகம், உலர் வலய தாவரப் பூங்கா, ரிதியகம மிருகங்கள் சபாரி, ருரியவௌ சர்வதேச விளையாட்டு மைதானம் ஆகியவற்றுக்கும் இலகுவில் சுற்றுலா மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதோடு தென் பிராந்திய சுற்றுலாத் துறையின் புதியதோர் திருப்புமுனையாகவும் இது அமையும்.

இவற்றோடு பிரதேச விவசாயிகள் தமது விவசாய உற்பத்திகளை தலைநகருக்கும் நாட்டின் ஏனைய பிரதேச சந்தைகளுக்கும் எடுத்துச் சென்று புதிய சந்தை வாய்ப்புக்களை பெறவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. அரச அதிகாரிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இரண்டரை மணி நேரத்திற்குள் தலைநகருக்குச் சென்று தமது அலுவல்களை கவனித்துத் திரும்புவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அம்பாறை, பதுளை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்ட மக்களும் இதனூடாக பயன் பெறவுள்ளனர்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இப்பாதையின் நிர்மாணப் பணிகள் ஆமை வேத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்தமையினால் மக்கள் அதிருப்தியில் இருந்தனர். புதிய அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், மீதமாக இருந்த நிர்மாணப் பணிகள் துரித வேகத்தில் நிறைவு செய்யப்பட்டுள்ளன. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மாத்தறையிலிருந்து பெலியத்தை வரையிலான பகுதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் நாளை 23ஆம் திகதி மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவிருக்கிறது. இதன் மூலம் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்தில் மற்றுமோர் புதிய அத்தியாயம் ஆரம்பமாகிறது. மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மத்தலை வரைக்கும் பயணிப்பதற்கான சந்தர்ப்பம் எமது நாட்டு மக்களுக்குக் கிடைக்கவுள்ளது.

எம். இர்பான் ஸகரியா
ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்


Add new comment

Or log in with...