மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா பிரவுன்சிக் பகுதியில் பொலிஸ் சோதனை சாவடிக்கு அருகாமையில் உயிர் பாதுகாப்பு பிரிவில் கடமை புரிந்துவந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனியார் பஸ்ஸில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பம் நேற்று (20) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் உயிர்பாதுகாப்பு பரிவில் கடமையாற்றி நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் இணைப்பு செய்யப்பட்ட அஜித் வீரசிங்க வயது 40 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சிவனொளிபாதமலை விசேட கடமைக்காக இணைப்பு செய்யப்பட்டு, மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திலிருந்து கடமைக்காக குறித்த பஸ்ஸில் சென்று, சோதனைச்சாவடியில் பஸ்களை நிறுத்தி வைத்திருந்த போது, பஸ்ஸில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்டபோது, குறித்த பஸ்ஸினை எடுக்கும் போது குறித்த உத்தியோகத்தர் பஸ்ஸின் சில்லில் அகப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - எம்.கிருஸ்ணா, ஹட்டன் விசேட நிருபர் - கே.சுந்தரலிங்கம்)
Add new comment