சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் நாட்டின் வளர்ச்சிப் பணிகள்

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் நாட்டின் வளர்ச்சிப் பணிகள் நடைபெறுவதை நாங்கள் உறுதி செய்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் இடம்பெயரும் வன உயிரினங்கள் பாதுகாப்பு மாநாட்டை பிரதமா் மோடி, தில்லியில் இருந்து காணொளி மூலம் நேற்று ஆரம்பித்து வைத்தார்.

5 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 126 நாடுகளை சேர்ந்தசுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் வன உயிரினங்கள் பாதுகாப்பு நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் அழிந்துவரும் விலங்குகள் மற்றும் பறவைகளை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. தொடக்க விழாவில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரும் பங்கேற்கவுள்ளார்.

மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசுகையில்,

இந்தியா உலகின் மிகவும் மாறுபட்ட நாடுகளில் ஒன்றாகும். உலகின் நிலப்பரப்பில் 2.4 சதவீதத்துடன், உலகளாவிய பல்லுயிரியலில் 8 சதவீதம் பங்களிக்கிறது.

பல ஆண்டுகளாக, வனவிலங்குகள் மற்றும் அதன் வாழ்விடங்களைப் பாதுகாப்பது இந்தியாவின் கலாசாரத்தின் ஒரு பகுதியாகும். இதனால் இரக்க குணமும், சமூகத்தில் வனவிலங்குகளும், மனிதர்களும் ஒன்றி வாழ ஊக்குவிக்கிறது.

தற்போது, ​​இந்தியாவில் கிட்டத்தட்ட 2,970 புலிகள் உள்ளன. 2022 ஆம் ஆண்டின் உறுதிசெய்யப்பட்ட தேதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் இலக்கை இந்தியா அடைந்துள்ளது.

பாதுகாப்பு, நிலையான வாழ்க்கை முறை மற்றும் பசுமை மேம்பாட்டு மாதிரியின் மதிப்புகளின் அடிப்படையில் இந்தியா காலநிலை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. பாரிஸ் ஒப்பந்த இலக்கின் அடிப்படையில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

விருந்தினரை உபசரிக்க வேண்டும் என்பதை நாம் பாரம்பரியமாகக் கடைப்பிடித்து வருகிறோம்.

இதுவே இந்த மாநாட்டின் கருப்பொருளில் பிரதிபலித்தது. அதாவது, “புலம்பெயர்ந்த பறவைகள் பூமியை இணைக்கின்றன, எனவே அவற்றை நமது வீட்டுக்கு நாமும் வரவேற்போம். மத்திய ஆசியா பறக்கும் பாதையில் புலம் பெயர்ந்த பறவைகளை பாதுகாக்க தேசிய செயல் திட்டத்தை இந்தியா தயாரித்துள்ளது என்று தெரிவித்தார்.


Add new comment

Or log in with...