மனித வாழ்வுக்கு மட்டுமன்றி பொருளாதாரத்துக்கும் ஆபத்து

1665 பேர் மரணம்; 68000 பேர் பாதிப்பு

சர்வதேச நிபுணர்கள் எச்சரிக்ைக

சீனாவில் ' கோவிட்-19' வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலைவரப்படி 1600 ஐ தாண்டியுள்ளது.

'கோவிட்- 19' எனப் பெயரிடப்பட்டுள்ள 'கொரோனா' என்ற கொடிய வைரஸ் சீனாவில் தொடங்கி பல நாடுகளில் பரவி வருகிறது. முதலில் வூஹான் நகரில்தான் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை நேற்று வரை 1662 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் 68,339 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ள வூஹான் நகரில் தங்கியிருந்த 175 நேபாள நாட்டினர், நேபாள் எயார் லைன்ஸ் மூலம் சொந்த நாடு திரும்பினர். 4 பேர் மட்டும் அங்கேயே , தொடர்ந்து தங்கியிருக்க முடிவு செய்துள்ளனர். 6 பேர் மருத்துவக் காரணங்களுக்காக விமானத்தில் அழைத்து வரப்படவில்லை.

இதேவேளை சீனாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 142 பேர் உயிரிழந்துள்ளார்கள். சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்றுக் காலை நி​ைலவரப்படி 68000 பேர் ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும் 1665 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கிறார்கள். நேற்றுக் காலை வரையான 24 மணி நேரத்தில் மட்டும் 2009 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவையெல்லாம் சீன சுகாதார அமைச்சகம் அதிகாரபூர்வமாக தெரிவித்த தகவல்கள் ஆகும். முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று 143 பேர் உயிரிழந்த நிலையில் சனிக்கிழமை நி​ைலவரப்படி அது 142 கை் குறைந்திருந்தது. இந்த மரணங்கள் எல்லமே ஹுபே மாகாணத்தில் மட்டும் நிகழ்ந்திருக்கின்றன. சீனாவில் தற்போது நிலைமை மோசமாகவே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

ஹுபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் வனவிலங்குகளை இறைச்சிக்காக வெட்டும் வதை கூடத்தில் இருந்து 'கோவிட் 19' என்ற புதிய வைரஸ் அதாவது கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்று சீனா நம்புகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க சீனா தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களே இதுவரை கொரோனாவின் தாக்கத்தால் உயிரிழந்து வருகிறார்கள். அதிலும் வயதானவர்களே அதிகம் இறக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தாக்கம் என்பது சீனாவின் ஜி ஜீன்பிங் தலைமையிலான கம்யூனிஸ அரசுக்கு பெரும் சவாலாகவும் தலைவலியாகவும் மாறி உள்ளது.இந்தப் பிரச்சினையில் இருந்து மீண்டு வருவதற்குள் எத்தனை பேரை சீனா பறிகொடுக்குமோ என்ற அச்சம் உலக நாடுளுக்கு ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்துமே தங்கள் நாட்டிற்கு கொரோனா பரவி விட்டால் என்ன செய்வது என்று அச்சத்துடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. உலகெங்கிலும் பரவி வரும் கொரோனாவின் தாக்கம், உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது என்று கூறலாம்.

உலகம் இப்படி நினைத்துக் கொண்டிருக்கையில், இன்னும் பலர் கொரோனா பற்றிய தாக்கத்தினை முழுமையாக அறிந்திருக்கவில்லை என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். இது உலகளாவிய தொற்று நோயாக மாறக் கூடும் என்று பீதியை கிளப்புகின்றனர் ஆய்வாளர்கள்.

ஹார்வார்ட் தொற்று நோயியல் நிபுணரான மார்க் லிப்சிட் இது பற்றிக் கூறுகையில், உலக மக்கள் தொகையில் 40_ -70% பேர் இந்த கொரோனாவால் பாதிக்கப்படலாம்" என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில், எத்தனை பேர் இதன் அறிகுறிகளை காண்பிப்பார்கள் என்றும் கணிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

​ெஹாங்​ெகாங் பல்கலைககழகத்தின் பொது சுகாதார மருத்துவத்தின் தலைவரான கேபிரியல் லியுங், "உலக மக்கள் தொகையில் 60% பேர் இந்த கொடிய வைரஸால் பாதிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளார். "இதில் 1-2% வரை இறப்பு வீதத்துடன் இருக்கும். இந்த ஆபத்தான சூழ்நிலை மாறும் வரை இதன் தாக்கம் இருக்கும்" என்று அவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மக்களை வாட்டி வதைக்கும் வைரஸ் ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் இதன் பீதியினால் பாதிக்கப்படும் தொழில்கள் உலகுக்கு பாதிப்பாக உள்ளன. இதனால் ஒட்டுமொத்த உலகமும் பொருளாதார சிக்கலை மேற்கொள்ளக் கூடும் என்று எதிர்வு கூறப்படுகிறது. இது குறித்து முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, சீனாவில் அனைத்து செயலில் உள்ள வணிகங்களில் 90% உள்ளடக்கிய 22 மில்லியனுக்கும் அதிகமான வணிகங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

உலகளாவிய பொருளாதாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கருதப்படும் இந்த நிறுவனங்கள், எதிர்காலத்தில் நீடித்த பணி நிறுத்தம் செய்தால், இதன் தாக்கம் உலகம் முழுக்க எதிரொலிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சீனாவின் தொழிற்சாலைகள் மூடல் இன்னும் சில காலத்திற்குத் தொடர்ந்தால் இது பெரும் நெருக்கடிக்கு வழிவகுக்கும். அதிலும் கொரோனா நிலைகொண்டிருக்கும் வுகான் மாகாணமே மிகப் பெரிய கணினி தொழிற்சாலைகளில் மிகப் பெரிய தாயகமாகும். இதே ஹூபே மாகாணம் வாகன கூறு தயாரிப்புகளின் மிகப் பெரிய தாயகமாகும்.

சீனா உலகின் தொழிற்சாலையாகும். உலகின் 90% கணினிகளை அந்நாடு உற்பத்தி செய்கிறது. ஆண்டுக்கு சுமார் 300 மில்லியன் கணினிகளை இந்நாடு உற்பத்தி செய்கின்றது. இதே உலகின் மொத்த பயன்பாட்டில் 70% ஸ்மார்ட்போன் உற்பத்தியை சீனா மேற்கொள்கின்றது. ஆண்டுக்கு சுமார் 2 பில்லியன் ஸ்மாட் போன்களை சீனா உற்பத்தி செய்கிறது. மேலும் 80% குளிரூட்டியை, (வருடத்திற்கு சுமார் 110 மில்லியன்) உலகெங்கிலும் விற்பனை செய்கின்றது. குறிப்பாக தொலைத் தொடர்பு சம்பந்தமான பக்கத்தில் 25% பொருட்கள், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

இறக்குமதிப் பொருட்களுக்கு அதிகம் சீனாவைச் சார்ந்திருக்கும் நாடுகள், அதிலும் சிறு உதிரிப்பாகங்கள் மற்றும் சிறு கூறுகள் இறக்குமதி செய்யப்படும் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவை அதிகம் நம்பியிருக்கும் நாடுகள் அதிகளவில் இந்த கொரோனாவால் பாதிக்கப்படும் என்று சந்தை நிபுணர்கள் அஞ்சுகிறார்கள். ஆக சீனாவைச் சார்ந்திருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அந்த வகையில் இது இந்தியாவிலும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


Add new comment

Or log in with...