மட்டக்களப்பில் விழிப்புலனற்றோர் சங்கத்தின் கொடிவாரம் ஆரம்பித்து வைப்பு

கிழக்குமாகாணத்தில் வாழ்ந்து வருகின்ற பார்வையற்ற மற்றும் பார்வைகுறைபாடுடையவர்களின் நலன் கருதிசெயற்படும் மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு நிதிசேர்க்கும் முகமாக வருடாந்தம் நடாத்தும் கொடிவாரம் இன்று (17) ஆரம்பமாகின்றது. இக் கொடிவாரம் எதிர்வரும் 28ஆம் திகதிவரை அமுல்படுத்தப்பட விருக்கின்றது.

இந்தக் கொடிவாரத்தை முன்னிட்டு முதலாவது கொடியினை மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவுக்கு மாவட்ட செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக இச்சங்க உறுப்பினர்களால் அணிவித்து கொடிவிற்பனை ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உதவிமாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரனிற்கும் மூன்றாவது கொடியினை மாவட்ட நவல சமூகசேவை உத்தியோகஸ்தர் திருமதி.சந்திரகலா குகனேஸ்வரன் உதவிமாவட்ட செயலாளர் பணிமனை சிசேஷ்ட முகாமைத்தவ உத்தியோகஸ்த்தர் ஏ.மொகமட் றிழாவிற்கும் இக்கொடி அணிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மட்டக்களப்பு மாநகர சபை உட்பட நகரிலுள்ள அரச செயலகங்களிலும் விழிப்புலனற்றோர் கொடிவிற்பனையில் ஈடுபட்டனர். இந்த கொடிவார நிகழ்வுகள் இம் மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவம் அறிவிக்கப்படுகின்றது. இம்மாகாணத்தில் வாழ்ந்துவரும் பார்வையற்ற பார்வைகுறைபாடுடையவர்களின் வாழ்வாதாரம் வளர்ந்தோர் கல்வி, கலை, மற்றும் விளையாட்டுதுறைகளில் மேம்படுத்தி சமூகத்தில் கௌரவமாக வாழ்வதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

இது தொடர்பாக உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் நிருவாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இக்கொடிவாரத்தினை அனுஷ்டிப்பதன் நோக்கம் கிழக்கு மாகாணத்தில் வசித்து வருகின்ற பார்வையற்றவர்களை இனங்கண்டு எமது சங்கத்தில் இணைத்துக் கொள்ளுதல், பார்வையற்றவர்கள் தொடர்பாக சமூகம் கொண்டுள்ள அனுதாபநிலையினை இல்லாது ஒழித்தல், அங்கத்தவர்களின் நலன்கருதி கணினிபயிற்சி நெறி, பிறேயில் எழுத்தப் பயிற்சி நெறி, அங்கத்தவர்களின் குழந்தைகளின் கல்வியினை விருத்தி செய்தல் போன்ற பல்வேறு நோக்கங்கள் கருதியே என அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த நல்ல செயற்பாடுகளுக்கு பூரண ஆதரவு வழங்கி பார்வையற்றவர்களின் வாழ்வு சிறப்பாக அமைவதற்கு பங்குதாரர்களாக தம்முடன் இணையும் பொருட்டு நமது சங்கத்தின் கொடி விற்பனைக்கு ஆதரவு வழங்குமாறு பொதுமக்கள், கல்விமான்கள் மற்றும் கொடையாளர்களை வேண்டிக் கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

(வ.சக்திவேல் - பெரியபோரதீவு தினகரன் நிருபர்)        


Add new comment

Or log in with...