தமிழரின் நியாயமான கோரிக்கையை சர்வதேச சமூகம் மதிக்க வேண்டும்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் நிர்வாக இயக்குனர் பவோலா பம்பலோனி தலைமையிலான குழுவினர் கடந்த திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இச் சந்திப்பின் போது கடந்த காலங்களில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடைமுறைகள் தொடர்பில் தெளிவுபடுத்தினார். இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியம் அங்கம் வகித்த இணைத்தலைமை நாடுகள் இந்தியா ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளிற்கு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

விடுதலைப் புலிகளுடனான யுத்தகாலத்தின் போது இந்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்த போதும் அவற்றை நிறைவேற்ற தவறியுள்ளமையையும் சுட்டிக்காட்டினார்.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக இந்த வாக்குறுதிகள் கைவிடப்படலாகாது என்றும் போராட்டம் தமிழ் மக்களினுடையது எனவே தமிழ் மக்களின் ஒன்றிணைந்த பிரிக்கமுடியாத பிளவுபடாத நாட்டினுள் அதிகாரபரவலாக்கம் என்ற நியாயமான கோரிக்கையை சர்வதேச சமூகம் மதிக்கவேண்டும் எனவும் இரா சம்பந்தன் வலியுறுத்தினார்.

இலங்கை அரசாங்கம் கொடுத்த இவ் வாக்குறுதிகள் தொடர்பில் சர்வதேச சமூகம் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்தின் அமைதியானது இலங்கை அரசாங்கம் இந்த வாக்குறுதிகளிலிருந்து விலகிச் செல்வதற்கு இன்னும் ஊக்கத்தைக் கொடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றுவதை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்திய இரா சம்பந்தன், விசேடமாக இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு தரப்பினரிடமும் அரசாங்க அதிகாரிகளிடமும் தங்கள் உறவினர்களால் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்னும் உண்மையை கண்டறிய வேண்டும்.

இது தொடர்பாக தமது நிலைப்பாடுகள் மிக விரைவில் தாம் எடுக்கும் தீர்மானங்கள் மூலம் வெளிப்படுமென ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் வாக்குறுதியளித்தனர்.


Add new comment

Or log in with...