சிறுமியை கற்பழித்து கொன்ற இருவருக்கு மரண தண்டனை

பன்னிரண்டு வயது சிறுமியை கூட்டாக கற்பழித்து கொலை செய்த இருவருக்கு சோமாலியாவில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆயிஷா அதென் என்ற சிறுமி கடந்த ஆண்டு பெப்ரவரியில் வடக்கு புட்லான்ட்ஸின் கல்கயோ என்ற நகரில் உள்ள சந்தை ஒன்றில் வைத்து கடத்தப்பட்டார். அடுத்த நாள் காலையில் அந்த சிறுமியின் உடல் அவரது வீட்டுக்கு அருகில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டது.

கூட்டாகக் கற்பழிப்புக்கு உள்ளாகி இருக்கும் அந்தச் சிறுமியின் பெண்குறி சிதைக்கப்பட்டு கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளார். இந்த கொடிய கொலை சோமாலியாவில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து மூவருக்கு கடந்த மே மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டு ஜூனில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் பொஸாசோ நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை பொதுச் சதுக்கம் ஒன்றில் வைத்து குற்றங்காணப்பட்ட இருவருக்கு துப்பாக்கிச்சூடு மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மூன்றாமவர் மீதான மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...