தொடர்புடைய மாணவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதை என்ற பெயரில் பாலியல் துன்புறுத்தல் புரிந்தவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண ஆளுநா் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற பகிடிவதை தொடர்பில் நாம் கவனமாகவும் நுணுக்கமாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம். எனக்குக் கிடைத்த அறிக்கையின் படி பல்கலைக்கழக நிர்வாகம் இந்த பகிடிவதையில் ஈடுபட்டோரின் விவரங்களை எடுத்துள்ளனர்.

பல்கலைக்கழக நிர்வாகத்தினரை நான் இன்று (நேற்று) சந்திக்க இருக்கின்றேன். அத்தோடு அந்த மாணவர்களுக்கு எதிராக சரியான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இருக்கின்றோம். வடக்கு மாகாண மாணவர்களது அடிப்படை உரிமைகளும் அவர்களது கல்வி நடவடிக்கைகளும் எமது ஜனாதிபதியின் உறுதுணையோடு முன்னெடுக்கப்படும்.

சீரழிந்து செல்லும் இச் சமூகத்தை மீளக் கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என்பதை மக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன். இப் பகிடிவதை தொடர்பான அனைத்து தகவல்களும் சமர்ப்பிக்கப்படும் போது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

வடக்கு மாகாணத்தில் கல்வியை மேம்படுத்துவதற்கு பெற்றோரதும் ஆசிரியர்களினதும் ஒத்துழைப்பு எமக்கு அவசியமானவை. அத்தோடு ஊடகங்களும் சமூக அமைப்புக்கள் உரிய நேரத்தில் விடயங்களை சுட்டிக்காட்டும் போது, அவற்றுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்


Add new comment

Or log in with...