வருமானம் குறைந்தவர்களுக்கான 10 பொருட்கள் சலுகை விலை; மார்ச் முதல்

வருமானம் குறைந்தவர்களுக்கான 10 பொருட்கள் சலுகை விலை; மார்ச் முதல் -Mahinda Rajapaksa Speech-Parliament

விசேட உரையில் பிரதமர் தெரிவிப்பு

குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு 10 அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கான ஜனாதிபதியின் உறுதிமொழி மார்ச் 01 முதல் அமுல்படுத்தப்படும் என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று (05) நாடாளுமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

விசேட உரை நிகழ்த்திய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இதனைத் தெரிவித்தார்.

லங்கா சதோச, கூட்டுறவு விற்பனை நிலையங்கள், பெண் தொழில்முனைவோரைக் கொண்ட விற்பனை நிலையங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அரிசி, மாவு, சீனி, கட்டுமானப் பொருட்கள் போன்ற துறைகளில் ஏகாதிபத்திய வர்த்தக முறையை நீக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

தரிசு நெல் வயல்களை மீண்டும் அபிவிருத்தி செய்து பாரம்பரிய நெல், மரக்கறி, பழங்கள், மலர் வளர்ப்பை மேம்படுத்த முன்னுரிமையளிக்கப்படும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

சூழலுக்கும், நுகர்வுக்கும் பயன்படுத்தக் கூடாத இறக்குமதிகளை கட்டுப்படுத்தி, நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய உருளைக்கிழங்கு, வெங்காயம், சோளம், சோயா, உழுந்து, பாசிப்பயறு ஆகியவற்றை உற்பத்தி செய்வதனை உடனடியாக ஆரம்பிக்க எதிர்வரும் பெரும்போகத்தில்  நடவடிக்கை எடுக்கப்படும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அது தொடர்பில் அவசியமான, விதை, உரம்,  நிதி மற்றும் விவசாயிகளுக்கு நியாயமான விலையைப் பெறுவதை உறுதிசெய்யும் உத்தரவாத விலை முறை அமுல்படுத்தப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

சீனி, பால் மா, கோதுமை மா, தகரத்தில் அடைக்கப்பட்ட மீன், கருவாடு போன்ற பாரிய இறக்குமதிகளுக்காக செலவிடப்படும் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்து, முழு உற்பத்தியையும் ஏற்றுமதி வர்த்தகத்தை இலக்காகக் கொண்ட வகையில் அரச வர்த்தக பொருளாதார பாதையை மாற்றியமைப்பதற்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் பிரதமரும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...