மினுவாங்கொடை - ஜாஎல வீதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த முச்சக்கரவண்டியில் மினுங்கொடையிலிருந்து பயணித்த இருவர், மினுவாங்கொடை - ஜாஎல வீதியின் மொன்டா சந்திக்கு அருகில், யாருமற்ற காணியொன்றில் வைத்து, அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியின் சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கி அவரிடமிருந்த 1,000 ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (02) இரவு 7.00 மணிக்கும் 9.00 மணிக்கும் இடையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி, நடமாடும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, ஜாஎல பொலிஸ் நிலைய பொலிஸாரினால் ஜாஎல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து ராகமை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மினுவங்கொடை, கம்பஹா வீதி, அம்பகஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர்கள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவில்லை எனவும், குற்றவாளிகளை கைது செய்வது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Add new comment