கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் சுமார் 50 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் மூவர் இன்று (23) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஆபரணங்களும், 32 தங்க பிஸ்கட்டுகளும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள், 15, 26, 33 வயதுடைய கேகாலை, கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்த இவர்கள், நுழைவுச்சீட்டு பெற்றுக் கொண்டு விமான நிலையத்திற்குள் சென்று மீண்டும் பயணிகள் வரும் பகுதிக்குச் சென்று மீண்டும் வெளியேறிய போது, சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது, 15 வயது நபர் தோளில் சுமந்து வந்த கறுப்பு நிற பொதியில் குறித்த தங்கங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைதானோர், மேலதிக விசாரணைக்காக, விமான நிலைய சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Add new comment